கடலூர், புதுச்சேரி, விழுப்புரத்தை சுழற்றி அடித்த சூறாவளி மழை
கடலூர்: ஃபனி புயலின் தாக்கம் காரணமாக வட கடலோர மாவட்டங்களாக விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ஃபனி புயல் ஒடிசாவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதன் தாக்கம் தமிழகம் வரை எதிரொலித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களான தைலாபுரம், வானுரில் இடி மின்னலுடன் கூடிய மாலையில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் 4 கார்கள் சேதமாகியது.
கடலூரில் இரவு 7 மணிக்கு மேல் கடும் சூறாவளி காற்று வீச தொடங்கியது. சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக காற்று மழையுடன் கடும் சூறாவளி வீசியது. கடல் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது. காற்றுடன் கூடிய கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர், அரியங்குப்பம், காலாப்பேட் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பாதுகாப்பு கருதி பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. ஃபனி புயல் தாக்கம் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஏற்கனவே வானிலைஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.