எது நடப்பினும்... அதிமுகவிலிருந்து விலக மாட்டேன்... தெற்குத்திட்டை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி உறுதி..!
கடலூர்: பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தரையில் அமரவைக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரி, அதிமுகவில் இருந்து தாம் விலகப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குத்திட்டை ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த இவரை ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தரையில் அமரவைக்கப்பட்ட நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ராஜேஸ்வரியை சாதியை காரணம்காட்டி அவமதித்த ஊராட்சி செயலாளர் சிந்துஜா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் சுகுமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்த நிலையில், ஊராட்சி மன்ற துணைத் தலைவரான மோகன்ராஜை போலீஸ் தேடி வருகிறது. இதனிடையே மோகன்ராஜ் அதிமுகவை சேர்ந்தவர் என திமுக மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ராஜேஸ்வரியும் அதிமுகவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராஜேஸ்வரியை பாஜகவில் இணையுமாறு அந்தக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்ட ராஜேஸ்வரி, எது நடந்தாலும் சரி அதிமுகவில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை எனக் கூறிவிட்டார்.
"நான்சென்ஸ்.." கொந்தளிக்கும் ராதிகா.. ஹைதராபாத் டீமிடமும் இப்படித்தான் கேட்பீர்களா.. அதிரடி ட்வீட்
இதனால் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரியை பாஜகவில் இணைக்க சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். தரையில் அமரவைக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்ட ராஜேஸ்வரியிடம் அமைச்சர் எம்.சி.சம்பத் நடந்தவற்றை கேட்டறிந்து தைரியம் அளித்திருந்தார்.