தரையில் அமர வைக்கப்பட்டு... பட்டியலின பெண் ஊராட்சி தலைவர் அவமானம்.. சிந்துஜா கைது!!
புவனகிரி: கடலூர் அருகே பட்டியலின ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் ஊராட்சி செயலர் சிந்துஜாவை எஸ்.சி., எஸ்.டி., தடுப்பு சட்டத்தின் கீழ் கைது புவனகிரி காவல்துறை கைது செய்துள்ளது.
தமிழகத்தில் பட்டியலின பெண் ஊராட்சி தலைவர் அவமதிக்கப்பட்டு இருப்பது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை ஊராட்சிமன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்.
கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி ஊராட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றது. அதில், ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டு இருக்கும் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து புவனகிரி காவல்நிலையத்தில் ஊராட்சிமன்றத் துணைத்தலைவர் மோகன் மீது ராஜேஸ்வரி புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, ஊராட்சிமன்ற துணைத்தலைவர் மோகன்ராஜ், ஊராட்சிமன்ற செயலர் சிந்துஜா ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புவனகிரி காவல்நிலைய காவலர்கள் ராஜேஸ்வரியிடம் நேரில் விசாரணை நடத்தினர். இதுகுறித்து மாவட்டக் கலெக்டர் சந்திரசேகர் சகாமுரி கூறுகையில், ''சம்பவம் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இன்றுதான் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது'' என்றார்.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து மேலதிகாரிகளுக்கு புகார் அளிக்காத ஊராட்சி செயலர் சிந்துஜாவை கடலூர் மாவட்ட கலெக்டர் பணியிடை நீக்கம் செய்து இருந்தார்.
தமிழ்நாடு... மாவட்ட வாரியான கொரோனா அப்டேட் லிஸ்ட்!!
இந்த சம்பவம் குறித்து ராஜேஸ்வரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''பஞ்சாயத்து கூட்டத்தில் நீ தரையில்தான் உட்கார வேண்டும் என்று மோகன் கூறுவார். அதனால், நானும் கீழேயே அமர்ந்துவிடுவேன். கொடி ஏற்றும் போதும் என்னை அனுமதிக்க மாட்டார். ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் தாங்க முடியாமல் புகார் கொடுக்க முடிவு செய்தேன் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில்தான் ஊராட்சி செயலர் சிந்துஜாவை எஸ்.சி., எஸ்.டி., தடுப்பு சட்டத்தின் கீழ் கைது புவனகிரி காவல்துறை கைது செய்துள்ளது.