கறி சோறு இல்லாத தீபாவளியா? ஐந்து மணி நேரத்தில் ரூ. 5 கோடிக்கு விற்ற ஆடுகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேப்பூர் ஆட்டுச் சந்தையில் 5 மணி நேரத்தில் ரூபாய் 5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடலூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டம், வேப்பூர் ஆட்டுச் சந்தையில் 5 மணி நேரத்தில் ரூபாய் 5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆடுகளின் விலை உயர்ந்துள்ளதால் ஆட்டுக்கறியின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை நாளில் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவது வழக்கம். இதற்காக ஆடுகள், கோழிகள் விற்பனை சந்தையில் களைகட்டியது. கடலூர் மாவட்டம் வேப்பூர் ஆட்டுச் சந்தையில் 5 மணி நேரத்தில் ரூபாய் 5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
வேப்பூர் ஆட்டுச் சந்தையில் குறைந்த பட்சம் 7,000 ரூபாயில் இருந்து அதிகபட்சம் ரூபாய் 20,000 வரை ஆடுகள் விற்பனையானது. அரியலூர், விழுப்புரம், பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 7,000க்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 5 மணி நேரத்தில் 5 கோடி ரூபாய்வரை ஆடுகள் விற்பனையானதால் ஆடு வளர்ப்பாளர்களும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த செவ்வாய்கிழமை திருபுவனம் ஆட்டுச்சந்தையில் ஒரே நாளில் 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது. திருபுவனம் சந்தைக்கு மதுரை, திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
ஆடுகளை வாங்குவதற்கு உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். மேலும் ஆடுகளின் விலையும் அதிகரித்திருந்தது. ஒரு ஆடு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விலைபோனது. 80 கிலோ எடையுள்ள ஒரு ஜோடி உயர் ரக வெள்ளாடு ரூ.40 ஆயிரம் வரை விற்பனையாது.
செகண்ட் வேவ் பீதி.. 3 மாநிலங்களில் ராக்கெட் வேகத்தில் உயரம் கொரோனா கேஸ்கள்.. அதிர்ச்சி அளித்த கேரளா!
தீபாவளி பண்டிகை என்பதால் ஆடுகளின் விலை அதிகரித்ததோடு, விற்பனையும் அதிகரித்தது. சந்தையில் ரூ.2கோடி முதல் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது என்று வியாபாரிகள் கூறினர். இந்த தீபாவளிக்கு ஆடுகளின் விலை உயர்வு காரணமாக ஆட்டுக்கறி விலை அதிகரிக்கும் என்றே கறி விற்பனையாளர்கள் கூறியுள்ளனர். ஆட்டுக்கறி 1 கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்றாலும் எங்களுக்கு ஆட்டுக்கறி சோறு போட்டே ஆகணும் என்று அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டனர் இளசுகள்.