அரசு உத்தரவு... சிதம்பரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் கனகசபை மீதேறிய பக்தர்கள்... மகிழ்ச்சி
கடலூர்: அரசு அனுமதித்ததை அடுத்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கனகசபையில் அனுமதிக்க தாமதித்தாலோ, பக்தர்களை தடுத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்த நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கனகசபை மீது ஏறி நின்று, சாமி தரிசனம் செய்ய அனுமதிப்பது வழக்கம். ஆனால், கடந்த சில நாட்களாக கோயில் தீட்சிதர்கள் பக்தர்களை சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்ய கூறி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், கனகசபையில் ஏறி நின்று, சாமி தரிசனம் செய்ய அனுமதி வழக்க வேண்டும் என்று பலரும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து அரசு ஆய்வு செய்தது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டது. அதில் "கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் அருள்மிகு சபாநாயகர் திருக்கோயிலில் கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் சபாநாயகரை தரிசனம் செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிதம்பரம், அருள்மிகு நடராஜர் திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கி வருவதால் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் பெருமளவில் வருகை புரிகின்றனர். இத்திருக்கோயிலில் மூலவரே உற்சவராக எழுந்தருள்வது சிறப்பாகும். அருள்மிகு சபாநாயகர் வீற்றிருக்கும் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சிதம்பர ரகசியத்தை தரிசிப்பது நடைமுறையில் இருந்து வந்தது.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக திருக்கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கு அரசால் வழங்கப்பட்ட அரசு வழிகாட்டி நெறிமுறைகளின்படி பக்தர்களிடமிருந்து பூஜை பொருட்களை பெறுதல், அமர்ந்து தரிசனம் செய்தல் மற்றும் அங்கபிரதட்சனம் செய்தல் ஆகியவை தவிர்க்கப்பட்டு வந்தது.
தற்போது கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளதால் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் விலக்கப்பட்டு அனைத்து திருக்கோயில்களிலும் ஏற்கனவே இருந்த வழிபாட்டு நடைமுறைகள் மீண்டும் தொடருகிறது. இத்திருக்கோயிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள் கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றயதாக பக்தர்கள் தரப்பில் பெரும் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கடலூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆகியோரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஆகம விதிகளைப் பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கருத்துருவினை அரசு பரிசீலனை செய்து, அருள்மிகு நடராஜர் திருக்கோயிலில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பழக்க வழக்கத்தின்படியும், பக்தர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டும் அருள்மிகு நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மண்டபத்தில் பக்தர்களை அனுமதிக்க தீட்சிதர்கள் அவகாசம் கேட்டுள்ளனர். கால அவகாசம் கேட்ட தீட்சிதர்கள் கூடுதல் ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்திலிருந்து புறப்பட்டு சென்றனர். கனகசபையில் அனுமதிக்க தாமதித்தாலோ, பக்தர்களை தடுத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்தது. இதனையடுத்து ஏராளமான போலீசார் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் குவிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான பக்தர்களும் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
மாலை 5 மணிக்கு கனகசபை திறக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸ் பாதுகாப்புடன் கனகசபை மீதேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கனகசபை மீதேறி நடராஜ பெருமானை தரிசனம் செய்தனர்.