பள்ளி திறப்பில் கறாராக இருந்து என்ன பயன்.? புத்தகங்களை வழங்குவதில் கோட்டை விட்ட தமிழக அரசு
சிதம்பரம்: சிதம்பரம் பகுதியில் பள்ளி திறந்து 17 நாட்களாகியும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாததால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர மிகவும் சிரமப்படுவார்கள். எனவே ஒருவார காலம் பள்ளி திறப்பை தள்ளி வைக்க பெற்றோர் தரப்பில் மாநிலம் முழுவதுமே கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் விடுத்த கோரிக்கையை செவிமடுக்காமல் அறிவித்தப்படியே கடந்த 3-ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறந்தது முதலே மாணவர்கள் கடும் வெயிலாலும், அனல் காற்றாலும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
லாக்கப் மரணம்: சர்ச்சைக்குரிய குஜராத் போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை
தமிழகமே வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள நிலையில் பள்ளிகளுக்கு உரிய முறையில் தேவையான தண்ணீரை ஏற்பாடு செய்ய இயலவில்லை. பல பள்ளிகளில் மின்விசிறிகள் சரியாக இயங்கவில்லை. இதில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு வேறு சேர்ந்து கொள்வதால், மாணவர்கள் வியர்வை மழையில் நனைந்தபடி பள்ளிகளில் தவித்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட பள்ளிகள் திறந்து இன்றுடன் 17 நாட்கள் ஓடிவிட்ட நிலையில் இன்னமும் அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு சரிவர பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை. சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பல மாணவ மாணவிகளுக்கு ஒரு சேர புத்தகங்கள் இன்னும் கிடைக்காததால் அவதிப்பட்டு வருகின்றனர்.
சிதம்பரம் மாவட்டத்தை பொருத்த வரை மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் தனியாக இயங்கி வருகிறது. புத்தகங்களை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு அனுப்பாததால் குளறுபடி நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் உச்சகட்டமாக சிதம்பரத்தில் அமைந்துள்ள பள்ளிகளை கடலூருக்கு சென்றும், காட்டுமன்னார் கோவில் பகுதியில் உள்ள பள்ளிகளை விருத்தசலத்திற்கு சென்றும் புத்தகங்களை பெற்று கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு சென்றாலும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் கிடைக்காமல், பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஆனால் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு ஜூன் 1-ம் தேதியே கல்வித்துறை அனைத்து பாடப்புத்தகங்களையும் விநியோகித்துள்ளது. ஆனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்காமல் தவிக்க விட்டுள்ளது என மாணவர்களும், பெற்றோர்களும் புலம்புகின்றனர்.
பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு புத்தகங்கள் முழுமையாக கிடைக்காததால், அரசு பள்ளிகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு கணிதம் மற்றம் சமூகஅறிவியல், பன்னிரெண்டாம் வகுப்பு வேதியியல், வரலாறு உள்ளிட்ட பாடப்புத்தகங்கள் எந்த ஒரு மாணவருக்கும் வழங்கப்படவில்லை.
எனவே சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, முழுமையாக பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி துறை அதிகாரிகளுக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.