மசினகுடியில் யானை மீது எரியும் டயரை வீசிய சம்பவம்.. தங்கும் விடுதிக்கு சீல் வைத்த ஆட்சியர்
கூடலூர்: நீலகிரி மாவட்டம் மசினகுடியில் படுகாயங்களுடன் உயிரிழந்த காட்டு யானைக்கு தீ வைத்ததாக இருவரை வனத்துறையினர் கைது செய்ததை அடுத்து அந்த தங்கும் விடுதிக்கும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடியில் கடந்த சில மாதங்களாக 40 வயதான ஆண் காட்டு யானை முதுகில் பலத்த காயத்துடன் சுற்றித் திரிந்து வந்தது. அந்த யானைக்கு வனத்துறையினர் பழங்கள் கொடுத்து மருந்து மாத்திரைகளையும் கொடுத்து வந்தார்கள்.
ஆனாலும் அந்த யானையின் உடல்நிலை சரியாகவில்லை. இதையடுத்து கும்கி யானைகள் உதவியுடன் அந்த யானையை பிடித்து சிகிச்சை அளித்து பார்த்தனர். அதிலும் பயனில்லை.
வனத்துறை
இந்த நிலையில் கடந்த 1 வாரத்திற்கு முன்பே மரவகண்டி நீர்த்தேக்கத்திற்குள் அந்த காட்டு யானை தண்ணீருக்குள் நின்றவாறு இருந்தது. பொதுவாக தாங்க முடியாத காயங்கள் இருந்தால்தான் யானைகள் இது போன்று தண்ணீரில் நிற்கும். இதனால் வனத்துறையினர் அந்த யானையை பார்வையிட்டனர்.
இடதுபக்கம் காது
அப்போது யானையின் இடதுபக்க காதில் பலத்த தீக்காயம் ஏற்பட்டிருந்தது. அந்த யானையின் காதின் சிறிய பகுதி துண்டாகி விழுந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து 19-ஆம் தேதி காட்டு யானையை பிடித்து முதுமலை வனப்பகுதியில் சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
பலியான யானை
இதற்காக அந்த யானையை லாரியில் ஏற்றினர். அப்போது முதுமலை செல்லும் வழியிலேயே அது இறந்தது. பின்னர் வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் இதுகுறித்து விசாரித்து வந்தனர். இதனிடையே காட்டு யானைக்கு யாரோ சிலர் தீ வைக்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவின. அதை கண்டு வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அலறிய யானை
அந்த வீடியோவில் மசினகுடி மாவனல்லா பகுதியில் தனியார் விடுதி அருகே காட்டு யானை வந்தது. அப்போது அதை விரட்ட பழைய டயர்களை போட்டு கொளுத்தினர். ஆனாலும் அந்த யானை நகராததால் டயர்களுக்கு தீ வைத்து அதன் மீது வீசினர். இது யானையின் காது, முதுகு மேல் பட்டது. காதில் தீப்பிடித்த டயர் மாட்டியபடி யானை அலறி துடித்தது.
வாயில்லா ஜீவன்கள்
சிறிதும் ஈவு இரக்கமில்லாத இந்த செயல் அனைவரையும் வேதனையடையச் செய்தது. உணவுத் தேடி வரும் வாயில்லா ஜீவன்களை இது போல் கொடூரமாக வதைப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் மசினகுடி தர்கா ரோட்டை சேர்ந்த பிரசாத் (36), மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியை சேர்ந்த ரேமண்ட் டீன் (28) , ரிக்கி ராயன் (31) ஆகிய 3 பேர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
யானை பலியான சம்பவத்தில் இருவர் கைது
இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதில் பிரசாத், ரேமண்ட் டீன் ஆக 2 பேரை கைது செய்தனர். ரிக்கி ராயனை தேடி வருகிறார்கள். காட்டு யானைக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து அந்த தனியார் விடுதிக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பேரில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.