உதவி கேட்டு வரும் மக்கள்... இல்லை என்று சொல்லாத எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.. முழுவீச்சில் நிவாரண உதவி
கடலூர்: ஊரடங்கு காரணமாக வருவாயின்றி அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் சிரமப்படும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சொந்த நிதியில் அரிசி, காய்கறி, உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறார்.
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அரிசி மூட்டைகள் இறக்கிவைக்கப்பட்டு ஒரு குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி பைகள் விநியோகம் செய்யப்படுகின்றன.
மேலும், இதுமட்டுமல்லாமல் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி, மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளையும் தனது தொகுதிகுட்பட்ட மக்களுக்கு அவர் கொடுத்து அனுப்புகிறார்.
ஊரடங்கால் தவிப்பு
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அன்றாடம் வேலைக்கு சென்று வருவாய் ஈட்டி வந்த தினக்கூலிகள் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்யமுடியாமல் தவித்து வருகின்றனர். இதேபோல் ஆட்டோ ஓட்டுநர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடி திருத்துநர்கள் என பல தரப்பினரும் கடந்த ஒரு மாதமாக எந்த வருமானமும் இல்லாமல் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
ஸ்டாலின் அறிவுறுத்தல்
இந்நிலையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும், அந்தப் பணிகளை தினமும் தாம் கண்காணித்து வருவதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அந்த வகையில் ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.பன்னீர்செல்வம் வரிந்துகட்டிக்கொண்டு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். தனது குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் கடலூர் மாவட்டம் முழுவதும் நிவாரண பொருட்களை விநியோகம் செய்கிறார்.
அனைவருக்கும் உதவி
நிவாரண பொருட்கள் வழங்கும் விவகாரத்தில் எந்த பாகுபாடும் பார்க்க வேண்டாம் என்றும் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த வறிய தொண்டர்களுக்கும் அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை கொடுக்க வேண்டும் எனவும் தனது கீழ் பணியாற்றும் நிர்வாகிகளுக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார். மேலும், தன்னை நேரில் சந்தித்து மருத்துவம் உள்ளிட்ட ஒரு சில உதவிகளுக்காக வருவோருக்கு அது பற்றி விசாரித்து செலவுக்கு பணம் கொடுத்து அனுப்புகிறார்.
தூய்மைப் பணி
நிவாரண பொருட்கள் வழங்குவதோடு தனது பணியை முடித்துக்கொள்ளாமல் கிருமி நாசினி தெளிக்கும் தூய்மைப் பணிகளை நேரில் சென்று பார்வையிடுகிறார். அவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் சிறிது நேரம் கலந்துரையாடுகிறார். மேலும், ஒன்றிணைவோம் வா என்ற செயல்திட்டம் மூலம் உதவி கேட்டு நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான அழைப்புகள் வரும் நிலையில் அதனை தனது ஊழியர்கள் மூலம் குறிப்பெடுத்து செய்துகொடுக்கிறார்.