நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணியா?.. பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி!
கடலூர்: ஒரு காலத்தில் தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம்வந்த தே.மு.தி.க.வின் நிலைமை இன்று மிகவும் பரிதாபகரமாக உள்ளது. ஏற்கனவே சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது தேமுதிக.
தற்போது 9 மாவட்டங்களுக்கு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்தது. இனிமேல் என்ன செய்ய போகிறோம்? என்ற நிலையியல்தான் தே.மு.தி.க இருக்கிறது.
ஆபாசமாக சித்தரிப்பு .. தி.மு.க பிரமுகர் ஜெயச்சந்திரன் மீது காயத்ரி ரகுராம் போலீசில் புகார்!
தேமுதிக நிலை
அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்த தேமுதிக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக கூட்டணியை முறித்துக் கொண்டது. தேர்தலுக்கு பிறகு ஆட்சி பொறுப்பேற்று கொண்ட திமுகவுடன் தொடர்ந்து இணக்கம் காட்டி வருகிறது. அ.தி.மு.க.வை சரமாரியாக விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த், திமுக ஆட்சியை பாராட்டி பேசி வருகிறார்.
சாமி தரிசனம் செய்தனர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தி.மு.க பக்கம்தான் தே.மு.தி.க கரை ஒதுங்கும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
யாருடன் கூட்டணி?
இதனை தொடர்ந்து இருவரும் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க., நிலைப்பாடு என்ன? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த், ' நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க., நிலைப்பாடு குறித்து அந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும்' என்று கூறினார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
இதன்பின்பு அவர் மேலும் கூறியதாவது:- பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது., சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்து வருகிறது. நடுத்தர, ஏழை மக்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கட்டுமான பொருட்களின் விலை 40 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது .மத்திய அரசு பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தி வருவதை கண்டித்து ஏற்கனேவே ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும். தி.மு.க. அரசு தற்போது வரை நடுநிலையாக செயல்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.