பாறை...நெத்திலி தீபாவளிக்கு கருவாடு விற்பனை...காராமணிக்குப்பத்தில் ரூ.1 கோடிக்கு விற்பனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காராமணிக்குப்பம் வாரச் சந்தையில் கருவாடு விற்பனை களைகட்டியது. ஒருகோடி ரூபாய்க்கு கருவாடு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடலூர்: கருவாடு சந்தைக்கு மிகவும் பிரபலமானது கடலூர் காராமணிக்குப்பம் வார சந்தை. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில் கருவாடு விற்பனை களைகட்டியது ஒரு கோடி ரூபாய்க்கு கருவாடு விற்பனையாகியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Recommended Video
மட்டன், சிக்கன், மீன் என்று வகை வகையாக அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டாலும் கருவாடு சமைத்து சாப்பிடுவதற்கு என்று தனி கூட்டமே உள்ளது. கருவாடு பிரியர்களுக்காகவே உள்ளது காராமணிக்குப்பம் சந்தை. இந்த சந்தையில் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கருவாடு விற்பனை களைகட்டியது.
கடலூர் மாவட்டம் காராமணிக்குப்பத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை அன்று கருவாடு, காய்கறி சந்தை நடைபெறுகிறது. தீபாவளி பண்டிகை வருவதால் பொதுமக்கள் ஏராளமானோர் இன்று சந்தையில் ஏராளமானோர் குவிந்தனர்.
கருவாடு சந்தை
சந்தைக்கு கடலூர், ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். கருவாடுகளை வாங்க தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் காராமணி குப்பம் சந்தைக்கு வந்திருந்தனர்.
காய்களை வாங்கிய பொதுமக்கள்
தீபாவாளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் காராமணிக்குப்பம் சந்தையில் காய்கறிகளையும், கோழி, கருவாடு என வீட்டிற்குத் தேவையான பொருட்களையும் பொதுமக்கள் வாங்கினர்.
விற்பனை படு ஜோர்
இந்த சந்தையில் கருவாடு விற்பனை படு ஜோராக நடைபெறும். கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை நேரத்தில் ஒரு கோடி வரை கருவாடு விற்பனையானது. கொரோனா காலத்தில் கருவாடு விற்பனை சற்றே மந்தமாக இருந்த நிலையில் தீபாவளி பண்டிகை காலத்தில் கருவாடுகள் அதிக அளவில் விற்றுத் தீர்த்தன.
கருவாடு வாங்க ஆர்வம்
பெரு வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கருவாடுகளை வாங்கிச் சென்றனர். நெத்திலி, பாறை, உள்ளிட்ட பலவகை கருவாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கருவாடுக்கு ஜி.எஸ்.டி சற்றே தளர்த்தப்பட்டுள்ளதால் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஒரே நாளில் ஓஹோ என்று ரூ.1 கோடி ரூபாய் வரை கருவாடு விற்பனையானதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.