இ பாஸ் அவசியம்.. ஏன் தெரியுமா? தமிழக முதல்வர் எடப்பாடி விளக்கம்
கடலூர்: இ பாஸ் அவசியம் என்று தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாஸ் இருப்பதால் தான் யார் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்டறிய முடிகிறது என்று கூறினார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பொது போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. இடையில் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மாவட்டங்களுக்குள் மட்டும் தனிநபர்கள் பயணிக்க அனுமதிக்க வழங்கப்பட்டது.
ஆனால் மற்ற வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு பயணிக்க இ-பாஸ் பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த பாஸ் பெற கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டதால் பலருக்கும் கிடைக்காமல் தவித்தனர்
ரஷ்யாவின் மற்றொரு கொரோனா தடுப்பூசியும் சக்சஸ்.. முதல் கட்ட டிரையலில் பாஸ்
அனைவருக்கும் இ பாஸ்
இதனால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் , தமிழகத்தில் இபாஸ் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 17 ஆம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டு, விண்ணப்பித்த அனைவருக்கும் இபாஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் வெளிமாநிலத்தில் இருந்து வருவதற்கு கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறது.
முதல்வர் ஆலோசனை
எனினும் பொது, போக்குவரத்துக்கு எந்த தளர்வும் வழங்கப்படவில்லை. பொதுபோக்குவரத்து இயக்குமா என்பது பெரும் கேள்வியாக உள்ளது. தமிழக அரசு வரும் 29ம்தேதி அறிவிக்கும் என தெரிகிறது. ஏனெனில் முதல்வர் அன்று தான் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மருத்துவ குழுவையும் சந்தித்து பேச உள்ளார். இதன்பிறகே முடிவு தெரியவரும்,
இ பாஸ் வேண்டாம்
இது ஒருபுறம் எனில், மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், தனிநபர் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்துக்காக மாநிலத்துக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான இயக்கத்திற்கு இபாஸ் உள்ளிட்ட எந்த தடையும் இருக்கக்கூடாது என்று கூறியிருந்தார். அப்படி இருந்தால் அது மத்திய அரசின் வழிகாட்டுதலை மீறுவதாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
புதுச்சேரி அறிவிப்பு
மத்திய அரசின் அறிவிப்புக்குபின்னர் புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் இ பாஸ் முறையை ரத்து செய்தன. இரு மாநிலங்களிலும் இ பாஸ் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தினர் வருவதற்கும் இபாஸ் தேவை இல்லை என்று அறிவித்துள்ளன.
முதல்வர் விளக்கம்
இதனிடையே கடலூரில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அந்த மாவட்டஆட்சி தலைவர் மற்றும் எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் பேட்டி அளித்த முதல்வர் பழனிசாமி, இ பாஸ் அவசியம் என்று கூறினார். இ பாஸ் இருப்பதால் தான் யார் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்டறிய முடிகிறது என்று விளக்கம் அளித்தார்.
மனஉளைச்சல்
மாணவர்களின் மன உளைச்சலுக்கு தீர்வு காணவே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு விளக்கம் அளித்தார். அரசு விழாவில் பங்கேற்றக அனைத்து கட்சி எம்எல்ஏக்களுக்கும் மாவட்ட ஆட்சியர் கடிதம் அனுப்பி உள்ளார் என்றும் முதல்வர் பழனிசாமி கூறினார்.