சோதனை மேல் சோதனை... எலி, பாம்பு கறிகளை சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம்
Recommended Video
கடலூர்: விருத்தாச்சலத்தில் தனியார் சர்க்கரை ஆலை தர வேண்டிய கரும்பு நிலுவைத்தொகையை உடனே வழங்கக் கோரி விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்றாவது நாள் போராட்டமாக, எலி மற்றும் பாம்புகளை வாயில் கவ்வியபடி விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பாலக்கரையில், ஆரூரான் தனியார் சர்க்கரை ஆலையானது இயங்கி வருகிறது.
விவசாயிகள் கோரிக்கை
இந்தநிலையில், கரும்பு விவசாயிகளுக்கு 23 மாதங்களாக தராமல் இருக்கும் நிலுவை தொகையை வட்டியுடன் தர வேண்டும், விவசாயிகளை ஏமாற்றி, கடன் என்ற பெயரில் ஆலை நிர்வாகத்துடன் துணை நின்று 40 கோடியை ஏமாற்றிய பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் போராட்டம்
கரும்பு டன் ஒன்று 4000 ரூபாய் வயல்வெளி விலையாக கொடுக்க வேண்டும், கரும்பு நிலுவை தொகை வழங்கும் வரை, விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அரை நிர்வாண போராட்டம்
ஆனால் ஆலை நிர்வாகமோ, அரசு துறை அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால், இரண்டாவது நாளான நேற்று, விவசாயிகள் அரை நிர்வாணத்தில், உடலில் பட்டை நாமத்துடனும், காதில் பூ வைத்துக் கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எலி, பாம்பு கறி
மேலும், மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்த அதிகாரிகள், மூன்றாவது நாளான இன்றும் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால், எலி மற்றும் பாம்புகளை கவ்வியபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி, பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.