நோய் பரவலை தடுக்க காய்ச்சல் முகாம்கள் பேருதவியாக உள்ளன.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
கடலூர்: கொரோனா நோய் பரவலை தடுக்க காய்ச்சல் முகாம்கள் பேருதவியாக உள்ளதாகவும், நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் அதிகம் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா தடுப்பு பணி, மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், உலக அளவில் கொரோனா தொற்று பரவி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் பரவி, தமிழகத்திலும் இந்த தொற்று பரவியது. அதை கட்டுப்படுத்த அரசு முழுமூச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தியாவில் 33 லட்சத்தை தாண்டிய கொரோனா.. ஒரே நாளில் 75,760 புதிய கேஸ்கள்.. 1023 மரணங்கள்
சரியான முறையில் சிகிச்சை
தமிழகத்தை பொறுத்தவரை சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு தொற்று நோய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கருதி மருத்துவ மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போதிய மருத்துவ கருவிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. யார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பபட்டாலும், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்து அவர்களை குணமடையும் சூழ்நிலையை ஏற்படுத்தி கொண்டிருக்கிறோம். இன்றைக்கு சரியான முறையிலே நம்முடைய மருத்துவர்கள் சிகிக்சை அளிக்கின்ற காரணத்தினாலே கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகம்.
அதிக பரிசோதனை
சரியான முறையிலே நம்முடைய மருத்துவர்கள் சிகிக்சை அளிக்கின்ற காரணத்தினாலே தொற்று ஏற்பட்ட பின் ஏற்படும் உயிரிழப்பு நாட்டிலேயே தமிழகத்தில் தான் குறைவாக உள்ளது. அதேபோல் இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. அதிகப்படியான நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதால் நோய் தொற்று விரைவாக கண்டுபிடிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது.
பேருதவி
இன்றைக்கு கடலூர் மாவட்டத்தில் மட்டும் தினமும் 300 முதல் 350 முகாம் நடைபெறுகிறது. இதுவரை கடலூர் மாவட்டத்தில் 8075 காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டுள்ளது. அதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டறியப்பட்டுள்ளனர். இப்படி கண்டறியப்படுவதால் தான் கொரோனா தமிழகத்தில் கட்டுப்படுத்தப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்க காய்ச்சல் முகாம்கள் பேருதவியாக உள்ளது. அதை அரசு உரிய முறையில் செய்து வருகிறது.
மருத்துவ குழுக்கள் அமைப்பு
எங்கெல்லாம் தொற்று ஏற்படுகிறதோ அங்கெல்லாம் ஆய்வு செய்ய கடலூர் மாவட்டத்தில் மட்டும் 39 நடமாடும் மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் எந்த பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டாலும் நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து நோய் தொற்றை தடுக்க முடியும். கடலூர் மாவட்டத்தில் தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளன. நோய்க்கு மருந்து இல்லை என்றாலும், மருத்துவர்கள் திறமையாக சிகிச்சை அளித்து நோய் தொற்றில் இருந்து குணமடைய செய்கின்றனர். மருத்துவர்கள் , செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 6.5 கோடி ரூபாய் கொரோனா தடுப்புக்காக கடலூர் மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது" என்றார்.