யானைக்கு தீ வைத்தவர்கள் மீது குண்டர் சட்டம்.. ஆட்சியரிடம் பரிந்துரை
கூடலூர்: மசினகுடியில் யானைக்கு தீ வைத்தவர்கள் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு வனத்துறை பரிந்துரை செய்துள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடியில் கடந்த சில மாதங்களாக 40 வயதான ஆண் காட்டு யானை முதுகில் பலத்த காயத்துடன் சுற்றித் திரிந்து வந்தது. அந்த யானைக்கு வனத்துறையினர் பழங்கள் கொடுத்து மருந்து மாத்திரைகளையும் கொடுத்து வந்தார்கள்.
ஆனாலும் அந்த யானையின் உடல்நிலை சரியாகவில்லை. இதையடுத்து கும்கி யானைகள் உதவியுடன் அந்த யானையை பிடித்து சிகிச்சை அளித்து பார்த்தனர். அதிலும் பயனில்லை.
கடந்த 1 வாரத்திற்கு முன்பே மரவகண்டி நீர்த்தேக்கத்திற்குள் அந்த காட்டு யானை தண்ணீருக்குள் நின்றவாறு இருந்தது.
அப்போது யானையின் இடதுபக்க காதில் பலத்த தீக்காயம் ஏற்பட்டிருந்தது.
அந்த யானையின் காதின் சிறிய பகுதி துண்டாகி விழுந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து 19-ஆம் தேதி காட்டு யானையை பிடித்து லாரியில் ஏற்றி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த போது யானை இறந்துவிட்டது. இதனிடையே யானைக்கு தீ வைத்தவர்கள் குறித்த வீடியோ காட்சிகள் வெளியானது.
இதையடுத்து மசினகுடி ரிசார்ட்டில் பணியாற்றுவோர் இது போன்ற மாபாதகத்தை செய்துள்ளார்கள். இதையடுத்து மூவரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மற்றொருவரை தேடி வருகிறார்கள். அந்த இருவரும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைத்துள்ளார்கள்.
இந்த நிலையில் யானை மீது தீப்பிடித்த டயர்களை வீசி யானையை கொன்றவர்கள் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கவுசல் பரிந்துரை செய்துள்ளார்.