குக்கரில் சாதம் மட்டுமா.. சாராயமும் காய்ச்சலாம்.. குடிகாரர்களின் குபீர் ஐடியா.. கடலூரில் பகீர்!
கடலூர்: ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் கடலூர் மாவட்டத்தில் மதுப்பிரியர்கள் குக்கரில் சாராயம் காய்ச்சுவது டிரெண்டாகி வருகிறது.
நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் ஊரடங்கு அமலில் உள்ளதால் ஏழை மக்கள் வேலையிழந்து, அன்றாட சாப்பாட்டிற்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்கே மக்கள் கஷ்டப்பட்டு வரும் இத்தகைய சூழ்நிலையில், குடிமகன்கள் சரக்கு கிடைக்கவில்லையே என கஷ்டப்பட்டு வருகின்றனர்.
மதுக் கடைகள் மூடல்
ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ஆரம்ப நாட்களில் கள்ளத்தனமாக மதுபானம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் கள்ளத்தனமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானங்களும் தற்போது காலியான நிலையில், மதுப்பிரியர்கள் மாற்று போதையை நாடி செல்கின்றனர்.
உயிரிழப்புகள் அதிகரிப்பு
மாற்று போதையினால் உயிரிழப்புகளும் அதிகம் ஏற்படுகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவோரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பண்ருட்டி பகுதியில் மாவட்ட மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் தலைமையில் பண்ருட்டி அருகே பெரியான்குப்பம் பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
குக்கரில் சாராயம் காய்ச்சும் கும்பல்
இதையடுத்து, அந்த பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெரியான்குப்பத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் வீட்டு தோட்டத்தில் குக்கரில் சாராயம் காய்ச்சியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 25 லிட்டர் சாராய ஊறல், 3 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
2 பேரைக் கைது செய்த போலீஸ்
மேலும் சாராயம் காய்ச்சியதாக அதே பகுதியை சேர்ந்த பெருமாள், செல்வம் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கடலூர் வடுகப்பாளையம் பகுதியில் போலீசார் ஒரு வீட்டை சந்தேகத்தின்பேரில் சோதனை செய்து பார்த்தபோது, 2 வாலிபர்கள் குக்கரில் சாராய ஊறல் போட்டு சாராயம் காய்ச்சியது தெரியவந்தது.
Recommended Video
விசாரணை
இதையடுத்து வீட்டில் இருந்த 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மணிகண்டன், ரஜினி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சாராய ஊறலையும் கைப்பற்றிய போலீசார் அவற்றை கீழே கொட்டி அழித்தனர்.