தமிழகத்தில் பல இடங்களில் இடி, மின்னலுடன் பெய்த கனமழை.. பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
Recommended Video
கடலூர்: தமிழகத்தில் ஆங்காங்கே பெய்து வரும் கனமழை விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குளஞ்சாவடி உள்ளிட்ட பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
இடைவிடாமல் சுமார் 3 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கொட்டிய கனமழை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மக்கள் மற்றும் விவசாயிகள், காற்று இல்லாமல் மழை கொட்டி தீர்ப்பதாக குறிப்பிட்டனர்.
ஏனெனில் தற்போது பெய்து வரும் கனமழைக்கு காற்றடித்தால் மாமரம், வாழை மரங்கள் உள்ளிட்டவை மிகுந்த சேதமடையும் வாய்ப்பு உள்ளது. கடந்த பல மாதங்களாக வாட்டி வதைத்த வெயிலினால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட போதிலும், தங்களது ரத்தத்தை சிந்துவது போல பாடுபட்டு, கஷ்டப்பட்டு மரங்களை உருவாக்கி வைத்துள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.
ஒருவேளை காற்றுடன் கூடிய கனமழை பெய்தால் தங்களது வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகி விடும் என அச்சம் தெரிவித்துள்ளனர் விவசாயிகள். அதே போல அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரத்திலும் சுமார் 1 மணி நேரம் மழை கொட்டியது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
அண்ணாச்சியின் "கடைசி ஆசை" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்!
நாகர்கோவில், கொட்டாரம் உள்ளிட்ட இடங்களில் சூறைக்காற்றுடன் கூடிய மழை கொட்டியது. இதனால் அம்மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூர், கோவை மாவட்டம் காந்திபுரம், உக்கடம், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய இடங்களில் இன்னும் சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.