சிதம்பரத்தில் கொட்டித்தீர்த்த கனமழை... வெள்ளத்தில் மூழ்கிய ஆகாய தலமான நடராஜர் ஆலயம்
சிதம்பரத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் நடராஜர் ஆலயத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 34 செமீ மழை பதிவாகியுள்ளது.
கடலூர்: புரேவி புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 34 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்த கனமழையால் சிதம்பரம் நடராஜர் கோவிலில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. ஆகாய தலமான நடராஜர் ஆலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த புரேவி புயல் தொடர்ந்து ராமநாதபுரம் அருகே மையம் கொண்டுள்ளது. ராமநாதபுரத்திற்கு தென்மேற்கே 40 கி.மீ. பாம்பனுக்கு மேற்கு தென்மேற்கு திசையில் 70 கி.மீ. தொலைவில் உள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் தூத்துக்குடி நோக்கி நகரும். இதனால் காற்றானது மணிக்கு 55 - 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். சில நேரங்களில் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நாகை,திருவாரூர், தஞ்சை, புதுச்சேரி, காரைக்கால், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, ஆகிய 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை கொட்டி வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 34 செ.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது. கொத்தவாச்சேரியில் 34 செ.மீ மழையும், அண்ணாமலை நகரில் 33 செ.மீ மழையும் லால்பேட்டையில் 30 செ.மீ மழையும் பரங்கிப்பேட்டை யில் 26 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
சிதம்பரம் நகரில் கொட்டித்தீர்த்த கனமழையால் நடராஜர் கோவிலுக்குள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கோவிலுக்குள் சாமி கும்பிட வந்த பக்தர்களின் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றது.
பொன்னம்பலமாக போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் ஆலயம் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சிவபெருமானின் பஞ்ச சபைகளில் கனகசபையாகவும், பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுகிறது சிதம்பரம் நடராஜர் கோவில். ஆருத்ரா தரிசனம் விழா இன்னும் சில நாட்களில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
Insane pounding happening in #Chidambaram #Cuddalore district.
— Kalyanasundaram (@kalyanasundarsv) December 4, 2020
Massive numbers recorded in Cuddalore district.
Chidambaram 340mm
Kothavacherry 335mm
Annamalai Nagar 329mm
Lalpet, 296mm
Parangipettai 264mm
Kattumannarkoil 253mm
Kurinjipadi 249mm
Video courtesy Social media. pic.twitter.com/YAhtpsXFl9
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. கோவிலுக்குள் வடிகால் வசதிகளை சரியான முறையில் தூர்வாராதால் தண்ணீர் வடிய வழியில்லாமல் உள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 3 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் நீடிப்பதால் மிக கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழை நீடிக்கும் பட்சத்தில் கடலூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.