கடலூரில் நள்ளிரவு முதல் கொட்டிய மழை... வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்... பொதுமக்கள் அவதி!
கடலூர்: கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் விட்டு, விட்டு பலத்த மழையும், இயல்பான மழையும் பெய்து வருகிறது.
Recommended Video
பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். பெரும்பாலான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு வெள்ள நீர் தேங்கி நிற்கிறது.
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை உள்பட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியதால் முக்கியமான ஆறு, அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பின. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. அதன்பின்னர் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றது. வழக்கமாக பிப்ரவரி மாத தொடக்கம் முதல் தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைக்கும்.
தமிழகத்தில் மழை
ஆனால் தற்போது கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை உள்பட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. புதுச்சேரி மாநிலத்தில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் புதுவையின் காலாட்பட்டு, வில்லியனுர் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன.
கடலூரில் கொட்டி தீர்க்கும் மழை
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் விட்டு, விட்டு பலத்த மழையும், இயல்பான மழையும் பெய்து வருகிறது. கடலூர் நகர் பகுதிகள், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம், வடலூர், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை கொட்டியது.
வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர்
இதனால் கடலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். பெரும்பாலான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். ஒரு சில பகுதிகளில் நடுரோட்டில் வாகனங்கள் பழுதடைந்ததால் சிலர் அவதியடைந்தனர். போக்குரத்து நெரிசலும் ஏற்பட்டது.