கும்பிடுவோம்.. கும்பிடுவோம்.. கொரோனா விழிப்புணர்வு பாடல்.. அசத்தும் காவலர்!
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தலைமைக் காவலர் சிவபெருமான் என்பவர் கொரோனா வைரஸ் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பாடல் ஒன்றை எழுதி பாடியுள்ளார். அந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபெருமான். இவர் மருதூர் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல், பெண் குழந்தைகள் விழிப்புணர்வு பாடல் என தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு பாடல்களை பாடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
கடலூர் சிவபெருமான்
சிவபெருமான் பாடிய பல விழிப்புணர்வுப் பாடல்கள் பிரபலமானவை. வெறுமனே அதைச் செய்யாதீர்கள் இதைச் செய்யாதீர்கள் என்று கூறுவதை விட்டு விட்டு அருமையான பாடல்களை, எளிமையான வரிகளைப் போட்டு பாடியே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் சிவபெருமான். இதனால் அவருக்கு போலீஸ் வட்டாரத்திலும் சரி பொதுமக்கள் மத்தியிலும் சரி நல்ல வரவேற்பு உள்ளது.
விழிப்புணர்வுப் பாடல்
இந்நிலையில் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து சிவபெருமான் பாடிய விரட்டிடுவோம், விரட்டிடுவோம் கொரோனாவை விரட்டிடுவோம் விழிப்புணர்வு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தப் பாடலை அழகாக அவர் உணர்ந்து உள் வாங்கிப் பாடியுள்ளார்.
கும்பிடுவோம் கும்பிடுவோம்
கும்பிடுவோம் கும்பிடுவோம் என்று கை கூப்பி வணக்கம் செலுத்தும் நமது பாரம்பரியத்தை பின்பற்றுவோம் என்று அவர் அழகாக எடுத்துக் கூறியுள்ளார். இப்போது பல விதமான நோய்களும் பல்வேறு தொடுதல்கள் மூலம்தான் வருகின்றன என்பது நினைவிருக்கலாம். கொரோனா வைரஸும் அப்படியேதான் பரவி வருகிறது. எனவே கை கூப்பி கும்பிடும் பழக்கத்தை சிவபெருமான் ஊக்குவிக்கிறார்
கவனமாக இருப்போம்
இதுகுறித்து தலைமை காவலர் சிவபெருமான் கூறுகையில், இந்த வைரஸ் குறித்து நாள்தோறும் செய்திதாள்களில் பார்க்கிறோம். தமிழகத்தில் இந்த வைரஸால் பாதிப்பு இல்லையென்றாலும், முன்னெச்சரிக்கையாக நாம் விழிப்புணர்வோடு, தூய்மையாக இருந்தால் அதன் பரவலைத் தடுக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறிய தகவலை வைத்து இந்த விழிப்புணர்வு பாடலை எழுதி, பாடியுள்ளேன். இதன் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுவது எனக்கு மன நிறைவைத் தருகிறது என்றார் சிவபெருமான்.