ரூ. 700 க்கு விற்ற பிராந்தி, விஸ்கி இப்போ 4,000.. கள்ளச்சாராயம் குடித்த முதியவர்.. பலி!
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் மதுபானம் கிடைக்காததால், கள்ளச்சாராயம் குடித்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் இன்று வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் குறையாததால் ஊரடங்கு உத்தரவை வரும் மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ரூபாய் 700 க்கு விற்கப்பட்டு வந்த புல் பாட்டில் பிராந்தி மற்றும் விஸ்கி தற்போது ரூபாய் 4,000 வரையில் கள்ளச் சந்தையில் விற்பனையாகிறது.
ஒருபக்கம் ஊரடங்கு உத்தரவால், வருமானம் இல்லாமல் தவித்து வரும் மதுப்பிரியர்கள், அதிக விலை கொடுத்து மதுவை வாங்க முடியாததால், கள்ளச்சாராயத்தை வாங்கி அருந்த தொடங்கியுள்ளனர். இதனால் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகளும் அதிகம் ஏற்படுகிறது. அதேபோல்
மது கிடைக்காத விரக்தியில் மதுப்பிரியர்கள் தற்கொலை செய்து வருகின்றனர்.
மேலும் மாற்று போதைக்கு ஆசைப்பட்டு உயிரிழக்கும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. அந்தவரிசையில் தற்போது கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரகாசு. மது போதைக்கு அடிமையான இவர், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியலிருந்து மது குடிக்காமல் அவதிபட்டு வந்துள்ளார். இதனிடையே அந்த பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் கள்ளச்சாராயம் விற்க்கப்படுவதை அறிந்த சந்திரகாசு, அங்கு சென்று சாராயம் குடித்துள்ளார்.
ஆனால் சாராயம் குடித்த சில மணி நேரங்களிலேயே சந்திரகாசு மற்றும் அந்த பகுதியில் சாராயம் குடித்த இருவருக்கு வாயில் நுரை தள்ளி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்கள் மூன்று பேரையும் மீட்டு, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சந்திரகாசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இருவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து குள்ளஞ்சாவடி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே கள்ளத்தனமாக அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுக்கவும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பு ஏற்படாமல் இருக்கவும் அசாம், மேகலாயா உள்ளிட்ட மாநிலங்களை போன்று தமிழக அரசும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மதுபானக் கடைகளை திறந்து வைக்க வேண்டுமென மதுப்பிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.