டாஸ்மாக் டோக்கனை ஜெராக்ஸ் எடுத்த குடிகாரர்கள்.. 200 ரூபாய்க்கு விற்பனை.. 16 பேர் கைது
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் வழங்கப்பட்ட டோக்கனை கலர் ஜெராக்ஸ் எடுத்து வந்து, மது வாங்க முயற்சி செய்த 16 குடிகாரர்களை போலீசார் கைது செய்தனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனிடையே மூன்றாம் கட்ட ஊரடங்கில் மத்திய அரசு சில தளர்வுகளை அளித்ததை தொடர்ந்து, கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.
அண்டை மாநிலங்களை காரணம் காட்டி தமிழக அரசும் கடந்த 7 மற்றும் 8 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் சிவப்பு மண்டலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை தவிர மற்ற பகுதிகளில் உள்ள அனைத்துக் கடைகளிலும் மதுபானத்தை விற்பனை செய்தது.
என்னா ஒரு பக்கா பிளான்.. கட்டுகட்டாக.. கலர் கலர் டோக்கன் அடித்து கலக்கிய டாஸ்மாக்.. அசந்துபோன மக்கள்
மக்கள் எதிர்ப்பு
கொரோனா நேரத்தில் மது விற்பனை செய்வதற்கு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் டாஸ்மாக் கடைகளில் குடிகாரர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மது வாங்கியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சுட்டிகாட்டி சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு தடை விதித்தது. மேலும் ஆன்லைன் மூலம் மது செய்வதற்கு அனுமதி அளித்தது.
மேல் முறையீட்டில் சாதகம்
இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று வந்தபோது, தமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு இருந்த சட்ட தடைகள் விலகி, இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
கலர் கலர் டோக்கன்
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 143 கடைகளில், கட்டுப்பாடு உள்ள பகுதிகளை தவிர மீதமுள்ள இடங்களில் உள்ள 134 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டன. மதுக்கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், வாரத்தில் ஏழு நாட்களுக்கு, 7 வண்ணங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டன. அதேபோல் ஒரு நாளைக்கு வயது அடிப்படையில் மொத்தம் 500 டோக்கன் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
ஜெராக்ஸ் எடுத்த குடிகாரர்கள்
இதைப் பார்த்த குடிகாரர்கள், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள 2428 மற்றும் 2429 எண்கள் கொண்ட டாஸ்மாக் கடைகளில் வழங்கப்பட்ட டோக்கனை, குடிகாரர்கள் கலர் ஜெராக்ஸ் எடுத்து மது வாங்க முயற்சி செய்தனர். மேலும் ஒருசிலர் டோக்கனை 200 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் 16 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிகாரர்கள் கலர் ஜெராக்ஸ் டோக்கன் எடுத்து வந்ததால் கடை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.