கடலூரில் ஒரே நாளில் 214 பேர் டிஸ்சார்ஜ்.. மருத்துவக்குழு சாதனை
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 416 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 214 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போதும் கடலூர் மாவட்டத்தில் ஆரம்ப காலத்தில் சில நாட்கள் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாகவே இருந்து வந்தது. கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவிடக்கூடாது என்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இருப்பினும் டெல்லி மத மாநாடு, வெளி மாநிலத்திற்கு சென்று திரும்பிய 26 பேர் முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பின்னர் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் திரும்பியவர்களால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. அதுமட்டுமல்லாமல் பயிற்சி பெண் காவலர்கள் 10 பேர் உள்ளிட்ட 14 போலீசாருக்கு ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடு கிடுவென உயர்ந்து, இதுநாள் வரை மொத்தம் 416 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் பெண் ஒருவர் இறந்துள்ளார். நேற்று பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில், யாருக்கும் பாதிப்பு இல்லை.
இந்நிலையில் கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைகளிலும், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 214 பேர் இன்று ஒரே நாளில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு மாவட்டத்தில் ஒரே நாளில் அதிகளவிலான கொரோனா நோயாளிகள் வீடு திரும்புவது இதுவே முதல்முறையாகும். மேலும் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 416 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்றுடன் சேர்த்து மொத்தம் இதுவரை 250 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 166 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாஸ்க் போடலயா 100 ரூபாய் அபராதம் கட்டுங்க.. கடுப்பான ஓட்டல் ஊழியர்கள்.. அதிகாரிகளுக்கு அடி உதை
கடலூர் மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 351 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டதில் 416 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும், 7 ஆயிரத்து 826 பேருக்கு நோய்த்தொற்று இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.