கொரோனா வார்டில் பெண் மரணம்.. என்ன காரணம்.. கடலூர் மக்கள் அச்சம்!
கடலூர்: கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் பலியான சம்பவம், கடலூர் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கடலூர் மாவட்டம், ஸ்ரீ முஷ்ணம் தாலுக்காவிற்குட்பட்ட பாளையங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜவள்ளி (35). இவருக்கு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில், கடந்த 30 ஆம் தேதி சிகிச்சைக்காக கடலூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்குள்ள பொது வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜவள்ளிக்கு இருமல் அதிகமாக இருந்ததால், அருகில் இருந்த நோயாளிகள், ராஜவள்ளிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்குமென பயந்தனர். இதனால் அவர் கொரோனா சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். மேலும் அவருடைய ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கொரோனா ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ராஜவள்ளிக்கு உடல்நிலை மோசமடைந்ததால், அவரை மருத்துவர்கள் டயாலிசிஸ் செய்வதற்காக அழைத்து சென்றபோது பரிதாபமாக உயிரிழந்தார். ராஜவள்ளியின் ரத்த பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. முடிவுகள் வந்த பிறகே, ராஜவள்ளி கொரோனா வைரஸ் பாதிப்பக்கப்பட்டு உயிரிழந்தாரா? அல்லது சிறுநீரக கோளாறால் உயிரிழந்தாரா? என்பது குறித்து தெரியவரும். கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் கடலூர் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே பல்வேறு நாடுகளிலிருந்து கடலூா் மாவட்டத்திற்கு திரும்பிய 3,090 போ் தொடா்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் கடந்த மார்ச் மாதம் டில்லியில் நடைபெற்ற இஸ்லாமியர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட 42 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவா்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இல்லை.
இருந்தாலும், அவா்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 42 பேரையும் கடலூா், விருத்தாசலம் அரசு மருத்துவமனைகளிலும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையிலும் தனி சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.