உலகத்துக்கோ தடுப்பூசிக்கு தட்டுப்பாடு.. இந்தியாவுக்கோ அதை போட்டுக் கொள்ள தட்டுப்பாடு
டெல்லி: சுகாதாரப் பணியாளர்கள் உட்பட பல முன்கள பணியாளர்கள், கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த கவலைகளால் அதனை செலுத்திக் கொள்ள தயங்குகிறார்கள்.
உலகில் பல நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருக்க, இந்தியா அதற்கு நேர்மாறான சிக்கலில் உள்ளது. இங்கு போதுமான அளவிலான தடுப்பூசிகள் இருந்தாலும், அதை போட்டுக் கொள்ளத் தான் ஆளில்லை.
உலகின் மிகப் பெரிய தடுப்பூசித் திட்டங்களை இந்தியா வகுத்துக் கொண்டிருக்க, சுகாதாரப் பணியாளர்கள் உட்பட பல முன்கள பணியாளர்கள், தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த கவலைகளால் அதனை செலுத்திக் கொள்ள தயங்குகிறார்கள்.
தடுப்பூசிக்காக உதவி கேட்கும் நாடுகள்
தடுப்பூசி விகிதம் போடும் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்காவிட்டால், ஜூலை மாதத்திற்குள் இந்தியா 300 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கை தவற விட நேரிடும். அதுமட்டுமின்றி, இது வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சியில் பின்னடைவை ஏற்படுத்தும்.
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை தான் பிரச்சனையாக உள்ளது, மேலும் சில நாடுகள் உதவிக்காக இந்தியாவை அணுகுகின்றன. கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்காக மாதத்திற்கு 500 மில்லியன் டோஸ் உற்பத்தி செய்ய முடியும் என்று இந்தியா கூறுகிறது. இங்கிலாந்து, பெல்ஜியம் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் அவற்றை வாங்க முயற்சித்து வருகின்றன. ஆனால், மருந்தை தயாரிக்கும் இந்தியாவில் அதனை போட்டுக் கொள்வதில் தான் பிரச்சனையாக உள்ளது.
தமிழகத்தின் நிலை?
தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் சுகாதார முன்களப்பணியாளர் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 10 நாட்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் கடந்த திங்கள் வரை 69 ஆயிரத்து 27 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று 4,926 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அத்துடன் மொத்தம் 73,953 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
புதியவகை கொரோனா முன்பு தடுப்பூசி ஜுஜுபி.. கலக்கத்தில் உலக நாடுகள்
இதனால் சுகாதாரத் துறை அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி மருத்துவ பணியாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
75% பேர் மட்டுமே
கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி, இந்தியாவில் சுமார் 2 மில்லியன் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில், தடுப்பூசிக்காக பதிவு செய்தவர்களில் 75% பேர் மட்டுமே ஜனவரி 21 ஆம் தேதி தடுப்பூசி போட வந்தனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு பீகாரில் இந்த விகிதம் 51.6% ஆக மிகக் குறைவாக இருந்தது. ஜனவரி 19 ஆம் தேதி, பதிவு செய்தவர்களில் சுமார் 55% பேர் ராஜஸ்தானிலும், 54% தமிழகத்திலும் தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.