வேகமாக வந்த கார்.. மடக்கிய போலீஸ்.. தப்பி ஓடிய சுந்தரேசன்.. உள்ளே எட்டி பார்த்தால்.. ஷாக்!
சாராயம் கடத்த உதவிய இன்ஸ்பெக்டரை போலீசார் தேடி வருகிறார்கள்
கடலூர்: செக் போஸ்ட்டில் வேகமாக வந்த காரை மறித்து, அதனுள் எட்டி பார்த்த கடலூர் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
கடலூர் அருகே உண்ணாமைலைசெட்டி சாவடியில் உள்ள செக் போஸ்ட்டில் போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வரவும் அதை யதார்த்தமாக மறித்தனர். ஆனால் காரில் இருந்தவரோ, திடுதிப்பென இறங்கி தப்பி ஓட்டம் பிடித்தார்.
அவர் ஓடியதை பார்த்ததும்தான் போலீசார் உஷாராகி காருக்குள் பார்த்தால், ஒரு பெண் உட்கார்ந்து கொண்டிருந்தார். அந்த காரை சோதனை செய்ததில், 148 மதுப்பாட்டில்களும், 30 லிட்டர் சாராயம் இருந்தது. காரில் இருந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போதுதான் 2 ஷாக்கான விஷயம் போலீசாருக்கு தெரியவந்தது. ஒன்று, அந்த பெண் ஒரு சாராய வியாபாரியாம். இரண்டாவது, இந்த பெண் இப்படி சாராயம் கடத்துவதற்கு உடந்தையே, கடலூர் கன்ட்ரோல் ரூமில் வேலை பார்த்து வரும் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் தானாம்!
48 வயதான சமுத்திரகனி ஒரு விதவை.. 2 மகள்கள் இருக்கிறார்கள். தொழிலுக்காக இப்படி சாராயபாட்டில்களை கடத்தி வந்துள்ளார். அப்போதுதான் இன்ஸ்பெக்டர் சுந்தரேசனுடன் பழக்கம் ஏற்பட்டது. பாட்டில் கடத்தி சென்று விற்க, தனக்கு உதவ வேண்டும் என்று சமுத்திரகனி இன்ஸ்பெக்டரிடம் கேட்க, அதற்கு இன்ஸ்பெக்டரும் ஓகே சொல்லி, தனது காரிலேயே சரக்குகளை புதுவையில் இருந்து வாங்கியும் வந்துள்ளார்.
போலீசாரை பார்த்ததும் காரில் இருந்து ஒருவர் தப்பி ஓடினாரே.. அவர்தான் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன்! அவர் இப்போது தலைமறைவாக உள்ளதால், அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.