கடலூரில் விவசாயி வீட்டில் 2 நாட்களாக வருமான வரி சோதனை- ரூ450 கோடி சொத்துகள் சிக்கின
கடலூர்: கடலூர் அருகே பண்ருட்டியில் விவசாயி சுகிசந்திரன் வீட்டில் வருமான வரித்துறை கடந்த 2 நாட்களாக நடத்திய அதிரடி சோதனையில் ரூ450 கோடி மதிப்பிலான சொத்துகள் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பையில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருபவர் ராம்பிரசாத். இவரது தந்தை பண்ருட்டி அருகே முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசித்து வருகிறார்.
கடலூரில் சொத்து குவிப்பு
கடந்த சில மாதங்களாக கடலூர் மாவட்டத்தில் பெருமளவு சொத்துகளை திடீரென சுகி சந்திரன் வாங்கு குவித்தார். இது அந்த பகுதி மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அதிகாரிகள் ரெய்டு
இந்நிலையில்தான் திடீரென 9 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் சுகி சந்திரன் வீட்டில் கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர். மும்பையில் இருந்தும் அதிகாரிகள் குழு இந்த சோதனையில் இணைந்து கொண்டனர்.
மகன் மும்பையில் தலைமறைவு
இது தொடர்பாக வருமான வரித்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, ராம்பிரசாத், மென்பொருள் நிறுவனம் மூலம் பல நூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளாராம்; இது தொடர்பான விசாரணைக்கு சிக்காமல் அவர் தலைமறைவாகிவிட்டார். ஆகையால் அவரது தந்தை சுகிசந்திரன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
ரூ450 கோடி சொத்துகள் பறிமுதல்
இந்த சோதனையில் சுமார் ரூ450 கோடி மதிப்பிலான சொத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என கூறினர். மேலும் தலைமறைவான ராம்பிரசாத், சர்ச்சைக்குரிய 'ரெட்டி' கான்டிராக்டர் ஒருவருக்கு பினாமி என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.