மதச்சார்பின்மைக்கு எதிரானவர்.. திமுக கூட்டணியில் கமல் சேர வாய்ப்பே இல்லை.. கே.எஸ்.அழகிரி
கமல்ஹாசன் குறித்து கே.எஸ்.அழகிரி மீண்டும் கருத்து கூறியுள்ளார்.
மயிலாடுதுறை: திமுக கூட்டணியில் கமல்ஹாசன் சேர வாய்ப்பு இல்லை என்றும் அரசியலில் கமல்ஹாசன் செய்திருப்பது மறைமுகமாக பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக இருக்கிறது என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மீண்டும் தெரிவித்துள்ளார்.
மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு கே.எஸ். அழகிரி, அவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த கீரப்பாளையத்துக்கு நேற்று வந்திருந்தார்.
அப்போது அவருக்கு பொதுமக்கள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடை வீதியில் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்த கே.எஸ்.அழகிரி, கட்சி கொடியையும் ஏற்றி வைத்து, சேத்துக்கால் செல்லியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனமும் செய்தார்.
கடன் தள்ளுபடி
பின்னர் அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அழகிரி சொன்னதாவது: "திருப்பூர் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, விவசாய கடன் தள்ளுபடி விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வாகாது என்றார்.
காங்கிரஸ் கட்சி
அப்படியென்றால் இந்த நான்கரை வருடங்களில் விவசாயிகள் பிரச்னையை தீர்க்க எந்த திட்டத்தை அவர் கொண்டு வந்தார்? ஆனால் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த மாநிலங்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஆயிரம் ரூபாய்
பாஜக தேர்தலை மையமாக வைத்துதான் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் என்று அறிவித்துள்ளது. அதேபோல தமிழகத்தில்கூட, தேர்தலை மனதில் வைத்துதான் ரேஷன் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கினர்.
வாய்ப்பு இல்லை
ஆரம்ப காலங்களில் மதச்சார்பின்மைக்கு ஆதரவாக பேசிவந்த கமலஹாசன், தற்போது திமுகவிற்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பதன் மூலம் அவர், மதச்சார்பின்மைக்கு எதிரானவர் என்பதை காட்டுகிறது. இது பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக அமைந்துள்ளது. இதனால் திமுக கூட்டணியில் கமல்ஹாசன் சேர வாய்ப்பு இல்லை" என்றார்.