தினகரன் பற்றிய கேள்விக்கு... இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே கலைச்செல்வன் எம்எல்ஏ
கடலூர்: தினகரன் எப்போது அமமுக என்ற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்தாரோ நான் அப்போதே அவருடனான தொடர்பை துண்டித்துவிட்டேன் என்று விருத்தாச்சலம் தொகுதி எம்எல்ஏ கலைச்செல்வன் செய்தியார்களிடம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து 18 எம்எல்ஏக்களுடன் பிரிந்து சென்ற தினகரன், அமமுக என்ற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்தார். அவரது அமமுக மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் படுதோல்வி அடைந்தது. இதனால் அவரது இயக்கத்தைவிட்டு பலரும் தாவி தாய் கழகமான அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
இதற்கிடையில் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக சபாநாயகர் தனபால் விருத்தாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன் உள்பட 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து தன்மீது நடவடிக்கை எடுக்ககூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் கலைச்செல்வன் மனு தாக்கல் செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆட்சியரிடம் மனு
தற்போது தேர்தல்கள் முடிந்துவிட்ட நிலையில், தனது தொகுதியில் வளர்ச்சி பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கடலூரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனை சந்தித்து கலைச்செல்வன் எம்எல்ஏ மனு அளித்தார்.
கட்சயில் உறுப்பினர் இல்லை
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கலைச்செல்வன், "எப்போது டிடிவி தினகரன் அமமுக என்ற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்தாரோ அப்போது இருந்தே அவருடனான தொடர்பை துண்டித்துவிட்டேன்.அவரது கட்சியில் நான் உறுப்பினர் கூட இல்லை. ஜெயலலிதா முதல்வராகவே எனக்கு வாக்களித்தார்கள். சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கியவர்கள் தான் அவரை முதல்வர் என்று கூறினார்கள். எம்எல்ஏக்கள் நாங்களும் அதனையே கூறினோம். சசிகலாவை நாங்கள் ஆதரித்தோம்.
கொறாடா உத்தரவை மீறவில்லை
இரட்டை இலை சின்னம் எங்கு உள்ளதோ அங்குதான் இருப்பேன். முதல்வரை சந்திப்பதற்கு தற்போது அவசியம் ஏற்படவில்லை. அவசியம் ஏற்பட்டால் நிச்சயமாக அவரை சந்தித்து பேசுவேன். சட்டமன்றத்தில் எப்போதும் அதிமுக கொறடா உத்தரவுப்படியே நடந்து வந்துள்ளேன். அதற்கு எதிராக செயல்பட்டதில்லை. ஆட்சியை நான் எப்போதும் எதிர்த்ததில்லை. ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதும் இல்லை" இவ்வாறு கூறினார்.
மாறிய எம்எல்ஏக்கள்
இதையடுத்து அதிமுக எம்எல்ஏவான கலைசெல்வன் தனது இயக்கத்தின் மீதும், தங்கள் இயக்க தலைமை மீதும் எந்த அதிருப்பதி இல்லை என்பதை இந்த பேட்டி மூலம் உறுதி செய்துள்ளார். இதேபோன்ற முடிவில் தான் பிரபு, ரத்னசபாபாதி ஆகியோரும் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அதிருப்தி எம்எல்ஏக்கள் என கூறப்பட்ட இந்த 3 பேர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.