ஒரு மாசமாச்சு.. பொண்ணு சாவுக்கு நியாயம் வரல! முதல்வர சந்திப்போம் -கலங்கும் கள்ளக்குறிச்சி மாணவி தாய்
கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளி மாணவியின் தாயார் தனது மகள் மர்ம மரணம் அடைந்ததற்கு நியாயம் கேட்டு தமிழ்நாடு முதலமைச்சரையும் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திக்கப் போவதாக தெரிவித்து உள்ளார்.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள சக்தி இண்டெர்நேஷனல் என்ற தனியார் பள்ளியில் கடந்த மாதம் 13ம் தேதி பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
மாணவி மரணத்துக்கு நியாயம் கேட்டு மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
நீலகிரி, கோவையில் கனமழை நீடிக்கும்..6 மாவட்ட மக்களும் உஷார்..எச்சரிக்கும் வானிலை மையம்
வன்முறை
பெரும் போராட்டமாக இது உருவெடுத்த நிலையில் ஒரு கும்பல் பள்ளியின் வாகனங்களுக்கும், பள்ளி கட்டிடத்துக்கும் தீ வைத்தது. இதனால் பள்ளி அமைந்துள்ள கனியாமூர் பகுதியே கலவரமயமானது. இந்த வன்முறை தொடர்பாக 300 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்தது. மாணவி மரண வழக்கு தமிழ்நாடு அரசால் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
5 பேர் கைது
வன்முறைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று உயிரிழந்த மாணவியின் தாயார் தெரிவித்த நிலையில், ஒரு கும்பல் திட்டமிட்டு உள்ளே புகுந்து பள்ளியில் தாக்குதல் நடத்தியதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். மாணவி மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும் செயலாளருமான சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜாமீன் வழக்கு
5 பேரும் நீதிமன்ற காவலில் உள்ள நிலையில் அவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை, பாலியல் குற்றங்களை விசாரிக்கும் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, பள்ளி நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் மீதான ஜாமீன் மனுவை வரும் 18-ஆம் தேதி விசாரிப்பதாக கூறி ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணைக்காக வந்திருந்த மரணமடைந்த பள்ளி மாணவியின் தாயார் செல்வி செய்தியாளர்களை சந்தித்தார்.
முதலமைச்சரை சந்திக்க திட்டம்
அப்போது பேசிய அவர், "என் மகள் மரணம் திட்டமிட்ட கொலை தான் என்று அனைவருக்கும் தெரியும். 30 நாட்கள் ஆகியும் இந்த மர்ம கொலைக்கு காரணம் யார் என்பது மர்மமாகவே உள்ளது. இந்த கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்து நியாயம் கேட்க உள்ளேன். மர்மத்தை வெளிகொண்டு வருவோம்." என்றார்.