அதிர வைத்த ஆசிரியை கொலை.. தற்கொலை செய்ய போவதாக கொலையாளி எஸ்எம்எஸ்!
Recommended Video
கடலூர்: ஸ்கூலுக்குள் நுழைந்து ஆசிரியையை கத்தியால் குத்தி கொன்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டாரா என குறிஞ்சிப்பாடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூரை சேர்ந்த பெண் ரம்யா, 23 வயதாகிறது. குறிஞ்சிப்பாடியில் ஒரு தனியார் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வந்தார்.
இவர் காலேஜில் படிக்கும்போது, ராஜசேகர் என்பவர் பழக்கமானார். இருவரும் ஒரே பஸ்ஸில் செல்வதால் இந்த நட்பு ஏற்பட்டது. இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
ஒருதலைக்காதல்
ஒரு கட்டத்தில் ராஜசேகருக்கு ரம்யா மேல் காதல் ஏற்பட்டது. அதனால் தன் விருப்பத்தை ரம்யாவிடம் சொல்லி இருக்கிறார். அதற்கு ரம்யா மறுத்துள்ளார். ஆனாலும் பலமுறை தொடர்ந்து விடாமல் ரம்யாவை விரட்டி விரட்டி காதலை வெளிப்படுத்தியே வந்தார் ராஜசேகர். ரம்யாவோ, "எங்கள் வீட்டில் இதை ஒத்து கொள்ள மாட்டார்கள். வேண்டுமானால் உங்க வீட்டில பெரியவங்களை கூட்டிவந்து எங்கள் வீட்டில் பேச சொல்" என்று சொல்லிவிட்டார்.
ரம்யா தவிர்த்தார்
இதையடுத்து, 6 மாசத்துக்கு முன்பு ராஜசேகர் ரம்யா வீட்டில் முறைப்படி பெண் கேட்டுள்ளார். ஆனால் ரம்யா வீட்டில் ராஜசேகரை ஏற்கவில்லை. வீட்டில் பெரியவர்கள் இப்படி சொல்லிவிட்டதால், ரம்யா ராஜசேகரனிடம் பேசுவதை முற்றிலும் தவிர்த்தார்.
கத்தியால் அறுத்தார்
இதுதான் ராஜசேகரனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதனால் நேற்று காலை பள்ளி வந்த ரம்யா தனியாக இருக்கும்போது ராஜசேகரன் கத்தியுடன் நுழைந்திருக்கிறார். ரம்யாவுடன் தகராறு செய்து கத்தியால் அவரது கழுத்தையும் சரமாரியாக அறுத்து தப்பி ஓடிவிட்டார்.
மெசேஜ்
இது சம்பந்தமான விசாரணையில் போலீசார் ஈடுபட்டனர். ரம்யாவின் பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், பள்ளியில் இருந்த சிசிடிவி கேமரா ஆய்வு என விசாரணை நீண்டது. அப்போது தப்பி ஓடிய ராஜசேகரை தேடி வந்த நிலையில், ராஜசேகர் தன் சகோதரி ஆனந்திக்கு ஒரு மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில், "நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்" என்று அனுப்பி உள்ளார்.
வெறும் மிரட்டலா?
இதையடுத்து போலீசார் ராஜசேகர் செல்போனை தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. ஒருதலைக்காதல் காரணமாக ராஜசேகர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எங்கேனும் பதுங்கி இருக்கிறாரா? இது ஒரு தற்கொலை மிரட்டலா? என்பது போன்ற விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர். அவரது செல்போன் டவர் சிக்னலை வைத்தும் தேடி வருகின்றனர்.