தைப்பூசம் திருவிழா: வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்- பக்தர்கள் பரவசம்
கடலுார்: வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில், இன்று காலை 149வது தைப்பூச ஜோதி தரிசன நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் 149வது தைப்பூச திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 40 கிராம மக்கள் ஒன்று கூடி சீர்வரிசை கொண்டு வந்த கிராம மக்கள் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக, வள்ளலார் பிறந்த மருதூரில் உள்ள அவரது இல்லம், வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரியச் செய்த கருங்குழி, அவர் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளில் கொடி ஏற்றப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு ஏழு திரைகள் நீக்கப்பட்டு, முதல் ஜோதி தரிசனம் காலை 6-30 மணிக்கு நடைபெற்றது. இதையடுத்து, 10 மணிக்கும், மதியம் 1-00 மணி மற்றும் இரவு 7-00, 10 மணிக்கும், மறுநாள் காலை 5.30 மணி என்று, 6 காலம், 7 திரைகளை நீக்கி, ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.
தைப்பூச நாளில் வள்ளலார் முக்கியடைந்தார். இறைவன் ஒளிமயமானவன் என்பதை உணர்த்தும் வகையிலேயே தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு வடலூரில் மது, மாமிச கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜோதி தரிசனத்தை காண நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வள்ளலார் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
சென்னை, புதுச்சேரி, கடலூர், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, கும்பகோணம், வேலூர் ஆகிய பகுதிகளிலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வடலூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.