விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வருவாரா?.. வரமாட்டாரா?.. பிரேமலதா பதில்
சிதம்பரம்: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், விஜயகாந்த் தங்களது கட்சி வேட்பாளர்கள் மட்டும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வாரா அல்லது மாட்டாரா என்பது குறித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்துள்ளார்.
வருகிற 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். பிரச்சார பொதுமேடைகளில், திமுக குறித்து காரசாரமாக தேமுதிகவினர் பேசி வருகின்றனர்.
அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் உள்பட 4 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்.. தேர்தல் ஆணையம்
மிகப்பெரிய எழுச்சி
இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக பிரேமலதா விஜயகாந்த் வந்திருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் உள்ள எல்லா தொகுதிகளிலும் மிகப்பெரிய எழுச்சியை பார்க்கிறோம் என்றும், அதிமுக கூட்டணியை மக்கள் வரவேற்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
அமோக ஆதரவு
இந்த கூட்டணி மெகா கூட்டணி, மக்களின் ஆதரவு ஒவ்வொரு தொகுதியிலும் அமோகமாக உள்ளது என்று கூறிய பிரேமலதா விஜயகாந்த், உறுதியாக 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறும் என்றும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை எனவும் தெரிவித்தார்.
பிரச்சார பயணம் எப்போது
தேமுதிக தலைவர் விஜயகாந்த் எப்போது பிரச்சார பயணத்தை தொடங்குகிறார் என்ற கேள்விக்கு, தலைமை கழகம் அறிவிக்கும் என்றார். இந்த கூட்டணி தர்மத்தோடு நடக்கிறது எனவும் கூறினார்.
திமுக குறித்து விமர்சனம்
தற்போது காங்கிரஸ் கட்சியில் நிறைய வாக்குறுதிகளை அள்ளி வீசி இருக்கின்றனர் என்றும் அவர்களின் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடியாத, சூழலில் திமுக கூட்டணி வைத்துள்ளது எனவும் விமர்சனம் செய்தார். எங்கள் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி என்று ஆணித்தனமாக சொல்கிறோம். அதை மக்களிடம் சொல்லி பிரச்சாரம் செய்து வருகிறோம். ஆனால் அவர்களால் சொல்ல முடியவில்லை. இதுவே மக்களிடம் மிகப் பெரிய கேள்வியாக உள்ளது எனவும் கூறினார். முன்னதாக, சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.