தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும்... விருத்தாசலம் தனி மாவட்டமாக்கப்படும்... மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
விருத்தாசலம்: திமுக ஆட்சிக்கு வந்ததும் விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அ.தி.மு.க ஆட்சியை மக்கள் தண்டித்தாக வேண்டும். அதற்கான காலமும், சூழலும் நெருங்கி கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
கருணாநிதி எனக்கு உழைக்க கற்று கொடுத்தார். போராட்டம் நடத்த கற்று கொடுத்தார். அஞ்சாமல் சிறைக்கு செல்ல கற்றுக் கொடுத்தார் என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மு.க. ஸ்டாலின் பிரசாரம்
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழர் கலையின் செழிப்பை காட்டும் இடமாக விருத்தாசலம் உள்ளது. ''வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் '' என்ற அருட்பெருஞ் ஜோதி வள்ளலாரின் வடலூரும் அருகில்தான் இருக்கிறது. வாடிய முகங்களின் ஏக்கங்களை போக்குவதற்காகவும், உங்களுடைய கோரிக்கைகளை கேட்பதற்காகவும், உங்களுடைய கவலைகளை தீர்ப்பதற்காகவும் நான் வந்திருக்கிறேன்.
மக்களுக்கு விரோதமான ஆட்சி
திமுக 5 முறை தமிழகத்தில் ஆட்சி செய்து இருக்கிறது. அப்போதெல்லாம் மக்களின் கோரிக்கை என்ன? மக்களுக்கு செய்ய வேண்டியவை எவை, தமிழகத்துக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டியதிருக்கிறது என்பதை யோசித்து முடிவெடுப்போம். அதை நிறைவேற்றியும் இருக்கிறோம். ஆனால் இப்போது இருக்கும் அதிமுக ஆட்சி மக்களை மறந்த ஆட்சி. மக்களுக்கு விரோதமான, மக்களை தண்டிக்கும் ஆட்சியாகும்.
சிறை செல்ல கற்றுக் கொடுத்தார்
இந்த ஆட்சியை மக்கள் தண்டித்தாக வேண்டும். அதற்கான காலமும், சூழலும் நெருங்கி கொண்டிருக்கிறது. ஸ்டாலினுக்கு உழைப்பு என்றால் என்னவென்று தெரியாது என்று முதல்வர் பேசி இருக்கிறார். அவர் எதை உழைப்பு என்கிறார்? காலை பார்த்தால் ஊர்ந்து போய் பதவியை பெறுவதும், அதன்பிறகு காலை வாரிவிட்டு பதவியை தக்க வைப்பதும் எனக்கு பழக்கமில்லை. கருணாநிதி எனக்கு உழைக்க கற்று கொடுத்தார். போராட்டம் நடத்த கற்று கொடுத்தார். அஞ்சாமல் சிறைக்கு செல்ல கற்றுக் கொடுத்தார்.
மக்களோடு, மக்களாக இருக்கிறேன்
மக்களோடு, மக்களாக இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார். மக்களுடைய வாழ்வில், தாழ்வில், சுக, துக்கங்களில் ஒன்றாக இருக்க கருணாநிதி எனக்கு கற்றுக் கொடுத்தார். புயல், வெள்ளம், மழை என எந்த துன்பம் வந்தாலும் முதல் ஆளாக நான் சென்று இருக்கிறேன்.தூத்துக்குடியில் 13 பேரை அரசு சுட்டுக்கொன்றபோது அங்கு சென்றேன். நீட் தேர்வு பயத்தினால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் வீடுகளுக்கு சென்றேன்.
அவசியம் இல்லை
வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகளுடன் போராட்டம் நடத்தினேன். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வீதிகளில் கையெழுத்து வாங்கினேன். கொரோனாவை பற்றி கவலைப்படாமல் மக்களுக்கு உதவி செய்துள்ளேன். மக்களோடு, மக்களாக இருந்த எனக்கு உழைப்பை பற்றி முதல்வர் கற்று தர வேண்டிய அவசியம் இல்லை. கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவி செய்வதில் அரசு கோபுரமாக உயர்ந்து நின்றது என்று விளம்பரம் கொடுத்துள்ளார்கள்.
விருத்தாசலம் தனி மாவட்டம்
கொரோனா காலத்தில் கொள்ளையடித்தவர்கள் இவர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வங்களுக்கு மாதம் ரூ.5,000 கொடுங்கள் என்று நான் கூறினேன். அப்போது பணம் இல்லை என்று சொன்ன முதல்வர் கோடிக்கணக்கான பணத்தை கான்டிராக்டர்களிடம் கொட்டி கொடுத்து இருக்கிறார். நீங்கள் முதல்வரானதும் விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று என்னிடம் ஒரு சிறுமி கூறி இருக்கிறார். அந்த சிறுமியின் வேண்டுகோளை ஏற்று திமுக ஆட்சிக்கு வந்ததும் விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
சிறுமி வேண்டுகோள்
முன்னதாக அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் மு.க.ஸ்டாலின். அப்போது சஞ்சனா என்ற சிறுமி, மு.க.ஸ்டாலினிடம் நீங்கள் முதல்வரானதும் விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.