பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடினாரா அமைச்சர் மகன்...? கடலூர் அதிமுக கலாட்டா
கடலூர்: தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் மகன் பிரவீன் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத நிலையிலும், அவரது பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடியுள்ளனர் கடலூர் அதிமுகவினர்.
இதுமட்டுமன்றி நேற்று பிறந்தநாள் கொண்டாடிய பிரவீன் பெயரில் மூத்த நிர்வாகிகள் பலர் போட்டி போட்டுகொண்டு கோவில்களில் அர்ச்சனை செய்துள்ளனர்.
ஏற்கனவே அமைச்சர் சம்பத்துக்கும் இரண்டு லோக்கல் எம்.எல்.ஏ.க்களுக்கும் ஏழாம் பொருத்தம் உள்ள நிலையில் அமைச்சர் மகன் பற்றி முதல்வரிடம் முறையிட்டுள்ளது எதிர்தரப்பு.
பதவியில்லை
கடலூர் மாவட்டச் செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் வனத்துறை ஒப்பந்ததாரராக இருந்து அரசியலில் என்ட்ரியாகி அமைச்சரானவர். தமிழக அமைச்சரவையில் உள்ளவர்களில் மிகவும் அமைதியான சுபாவம் உடைய இவர், பொது இடங்களில் அதிர்ந்து கூட பேசியதில்லை. இதனால் இவர் மீது ஜெயலலிதா காலம் தொட்டே நல்ல பெயர் இருந்து வருகிறது.
பிறந்தநாள்
இந்நிலையில் எம்.சி.சம்பத்தின் மகன் பிரவீன் அதிமுகவில் எந்த பதவியிலும் இல்லை. ஆனாலும் அவரை வைத்து காரியம் சாதித்துக்கொள்ள வேண்டும் என எண்ணும் சில நிர்வாகிகள், அவரது பிறந்தநாளான நேற்று போட்டிபோட்டிக்கொண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு அர்ச்சனை நடத்தினர்.
புகழாரம்
மேலும், சிலரோ அமைச்சர் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி விளம்பர பதாகைகள் தயார் செய்திருந்தனர். இது அமைச்சர் எம்.சி.சம்பத்திற்கு எதிராக மாவட்டத்தில் அரசியல் செய்யும் இரண்டு லோக்கல் எம்.எல்.ஏ.க்கள் தரப்பை கொதிப்படையச் செய்தது.
ஆடம்பரம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆடம்பரமாக அமைச்சர் மகன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் என எதிர்தரப்பினர் முதல்வர் வரை புகாரை கொண்டு சென்றனர். இதனிடையே அதிமுக தலைமைக்கழக ஊழியர் ஒருவரிடம் பேசிய போது, பாஸ் அரசியலில் இதெல்லாம் சாதாரணம், யார் மீது தான் புகாரில்லை என பதில் வந்தது.