ஷாக்.. குடிகார மணிகண்டன் ஒரு பக்கம்.. 3 பெண் குழந்தைகள் மறுபக்கம்.. கால்வாயில் தூக்கி வீசிய தாய்!
3 பெண் குழந்தைகளையும் ஓடையில் வீசிய தாய் கைது செய்யப்பட்டார்
Recommended Video
கடலூர்: குடிகார மணிகண்டன் ஒரு பக்கம், 3 பெண் குழந்தைகள் மறுபக்கம்.. என்ன செய்வதென்றே தெரியாமல் கால்வாயில் உயிருடன் குழந்தைகளை இரக்கமே இல்லாமல் தூக்கிவீசிவிட்டார் பெற்ற தாய்!
கடலூர் மாவட்டம் சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த தம்பதி மணிகண்டன் - சத்யவதி. 8 வருடத்திற்கு முன்பு கல்யாணம் ஆனது. இவர்களுக்கு அக்ஷயா 6, நந்தினி 4, தர்ஷினி 2 வயதில் 3 பெண் குழந்தைகள்!
மணிகண்டன் குடிபழக்கத்துக்கு ஆளானவர். இதனால் சம்பாதிக்கும் வருமானம் எல்லாம் குடிப்பதற்கே போய்விடுவதால், குடும்பத்தை சத்யவதியால் சமாளிக்க முடியவில்லை.
எவ்வளவோ சொல்லியும் கணவனும் திருந்தியபாடில்லை. தினமும் பிள்ளைகளை வைத்து கொண்டு சண்டை, சச்சரவுதான் நடந்து வந்துள்ளது. அதனால் ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த சத்யவதி, கீழமணக்குடியில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டுக்கு 3 குழந்தைகளுடன் சென்றிருக்கிறார்.
அங்கு சத்யவதியின் அம்மா, மகளை சமாதானப்படுத்தி திரும்பவும் கணவன் வீட்டுக்கு அனுப்பி உள்ளார். பிள்ளைகளை அழைத்து கொண்டு வீட்டுக்கு போகவே சத்யவதிக்கு விருப்பம் இல்லை. அதனால், போகும் வழியில் மீராளூரில், 3 குழந்தைகளுக்கும் ஸ்வீட் வாங்கி தந்துள்ளார். இதற்கு பிறகு 3 குழந்தைகளையும், வீட்டுக்கு வந்து தூங்க வைத்துள்ளார்.
அவர்கள் நன்றாக தூங்கியதும், பின்னலூர் ராஜ வாய்க்கால் என்று சொல்லப்படும் ஒரு ஓடையில் உயிருடன் தூக்கி 3 பேரையும் வீசிவிட்டார். இதற்கு பிறகு சத்யவதி அங்கிருந்து கிளம்பி செல்ல மனசே இல்லாமல் ஓடையை சுற்றி சுற்றி வந்துள்ளார். இதை அந்த பகுதியில் இருந்த ரோந்து போலீசார் கவனித்து, கூப்பிட்டு விசாரித்துள்ளனர்.
அதற்கு குடும்பத்தில் சண்டை என்றும், 3 குழந்தைகளையும் இந்த கால்வாயில் போட்டுவிட்டேன் என்றும் சொன்னார். இதை கேட்டு அதிர்ந்த ரோந்து காவலர்கள், காட்டுமன்னார் கோயில் போலீசாருக்கு தகவலை தெரிவித்தனர். இதையடுத்து, விடிகாலையிலேயே தீயணைப்புத் துறையின் உதவியுடன் 3 குழந்தைகளையும் தேடும் பணி துவங்கியது.
இதில் 2 குழந்தைகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 3-வது குழந்தையின் சடலத்தை போலீசார் தேடி வருகிறார்கள். இறந்த குழந்தைகளை கட்டிக் கொண்டு மணிகண்டன் கதறி அழுதது அந்த ஊர் மக்களை கண் கலங்க செய்தது. இரக்கமே இல்லாமல் ஓடையில் குழந்தைகளை தூக்கி போட்டு கொன்ற சத்யவதியிடம் விசாரணை நடந்து வருகிறது.