கடலூரில் நடந்தது அதிமுக கூட்டமா..? அரசு கூட்டமா..? முதலமைச்சருக்கு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேள்வி
கடலூர்: கடலூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தியது அரசு சார்பில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டமா இல்லை அதிமுக கட்சி கூட்டமா என திமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வினவியுள்ளார்.
திமுக மக்கள் பிரதிநிதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புறக்கணித்துவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், தற்போதுள்ள கடலூர் மாவட்ட ஆட்சியர் இளைஞராக இருப்பதால் சிறப்பாக செயல்படுவார் என தாம் நினைத்ததாகவும் ஆனால் தமது நம்பிக்கையை அவர் பொய்யாக்கிவிட்டதாகவும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
"எடப்பாடி அரசுக்கு எதிராக ஏன் வாக்களித்தீர்?".. 11 எம்எல்ஏக்களிடமும் விசாரணையை துவக்கினார் சபாநாயகர்
மாவட்ட ஆட்சியர்
கடலூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 8400 நபர்கள் இதுவரை கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த மாவட்டத்தில் கிட்டத்தட்ட 97 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கு தமிழக அரசும், சுகாதாரத்துறையின் அலட்சியமே காரணம். தற்போது இருக்கிற மாவட்ட ஆட்சித்தலைவர் இளைஞராக இருப்பதால் நன்றாக செயல்படுவார் என்று நினைத்தோம் ஆனால் தற்போது முற்றிலுமாக நம்பிக்கை இழந்து இருக்கிறோம்.
புள்ளிவிவரம்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இறப்பு விகிதம் குறைந்துள்ளது என்றும், முதலமைச்சர் சட்டசபையில் இன்னும் 10 நாட்களில் கொரோனா தொற்று முற்றிலுமாக குறைந்து விடும் என்றார். சுகாதாரத்துறையில் பணிபுரியும் இயக்குநர், இணை இயக்குநர் யாராக இருந்தாலும் களப்பணியில் ஈடுபடாமல் புள்ளி விவரங்களை மட்டும் கொடுத்து விடுகிறார்கள்.
மக்கள்
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக களப்பணியாளர்கள் உள்ள கட்டமைப்புடன் கூடிய சுகாதாரத்துறை இயங்கி வருகிறது. சரியான வழிகாட்டுதல்கள் இல்லாத காரணத்தால் நோயின் தாக்கம் அதிகரித்து, உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதற்கு சரியான விழிப்புணர்வும், திட்டமிடலும் இல்லாத காரணத்தினால் தொற்று பரவி வருகிறது. அரசாங்கமும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் இந்த நோயை முற்றிலும் விரட்டி அடிக்கலாம். ஆனால் இந்த அரசாங்கமோ தான் தோன்றி தனமாக செயல்பட்டு வருகிறது.
ஆய்வுக்கூட்டம்
சட்டமன்ற தேர்தல் வருவதால் முதலமைச்சர் அவர்கள் ஆய்வு கூட்டம் என்ற பெயரில் எந்தவிதமான முன்னேற்பாடுகளும் இல்லாமல் கூட்டங்களை நடத்தி வருகிறார். முதலமைச்சர் ஆய்வு கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளான திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொள்வதற்கு அழைப்பு இல்லை. ஏனென்றால் தவறுகளை சுட்டிக்காட்டுவோம் என்பதால் எங்களுக்கு அனுமதி கிடையாது.
வாய் ஜவடால்
அதிமுக வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு அதிகாரிகள் யாரும் களப்பணியில் ஈடுபடவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தான் எங்களால் முடிந்த அளவில் களப்பணியில் ஈடுபட்டு உதவிகளை செய்து வந்தோம். நோயின் தன்மை தெரியாமலே மக்களை காப்போம் என்று வாய் ஜவடால் அடித்தார்கள். ஆய்வு கூட்டம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் வேலையை கைவிட வேண்டும்.