நாகை, கடலூரில், தூத்துக்குடியில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு - மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாகக்கூடும் என்பதால் நாகை, கடலூர், காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
கடலூர்: வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ளதை குறிக்கும் வகையில் நாகை, கடலூர், காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாகக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் கரையை கடந்து ஒருவாரம் கூட முடிவடையாத நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த புயலால் டெல்டா மற்றும் வட தமிழகத்தில் டிசம்பர் 2 முதல் 4ம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
குமரி கடல் பகுதிக்கு நகரும் புயல்
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வலுவடைகிறது. நாளை மறுநாள் இலங்கையை கடந்து புயல் குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும். காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கே 975 கிலோ மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
கனமழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரியில் இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம். நாளை தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
டிசம்பர் 3ஆம் தேதி கனமழை
டிசம்பர் 2ஆம் தேதியன்று தென்காசி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 3ஆம் தேதியும் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டு
சென்னை நகர், புறநகரில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 3ஆம்தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கனமழை காரணமாக கடலூர், நாகை, காரைக்கால், எண்ணூரில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.