ஏழைத் தாயின் மகன் செய்யும் வேலையா இது? கடலூர் பிரச்சாரத்தில் ஸ்டாலின் கோபம்
கடலூர்: ஏழைத் தாயின் மகன் என்று சொல்பவர், செய்யக்கூடிய வேலை இதுவா என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
கடலூர் தொகுதிக்கு உட்பட்ட வடலூர், பகுதியில் இன்று இரவு நடைபெற்ற திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், கடலூர் தொகுதி திமுக வேட்பாளர் ரமேஷுக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரித்து உரையாற்றினார்.
இதில், சிதம்பரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர், தொல்.திருமாவளவன் பங்கேற்றார். அவரையும் அறிமுகம் செய்து ஓட்டு கேட்டார் ஸ்டாலின்.
கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின் முதல்வராவது உறுதி .. உதயநிதி ஸ்டாலின் ஆரூடம்!
தேர்தல் அறிக்கை ஹீரோ
மேலும், இந்த பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ. ஆனால் பாஜக தேர்தல் அறிக்கை வெறும் ஜீரோ. அந்த கட்சியின் தேர்தல் அறிக்கை வெறும் கற்பனைகள் நிறைந்தது. 15 லட்சம் ரூபாயை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்துவதாக கூறிய நரேந்திர மோடி இதுவரை 15 பைசா கூட உங்களுக்கு தரவில்லை.
ஊழல்வாதிகளுக்கு காவல்
பிரதமர் நரேந்திர மோடி தன்னை காவலாளி என்று அழைத்துக் கொள்கிறார். அவர்கள் காவல் காப்பதெல்லாம், ஊழல்வாதிகளுக்குதான். ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைந்த தமிழக அமைச்சர்களையும், முதல்வரையும் தான் அவர் காவல் காத்துக் கொண்டிருக்கிறார். ரபேல் ஊழல் இப்போது பாஜக மற்றும் மோடியை அம்பலப்படுத்திவிட்டது.
ஏழைத்தாயின் மகன்
குற்றச்சாட்டுக்கள் வந்ததும் தான் ஒரு ஏழைத்தாயின் மகன் என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார் நரேந்திர மோடி. தேநீர் விற்பனை செய்து பிரதமராக முன்னேறியதால் தான், தன்னை விமர்சனம் செய்வதாக அவர் கூறுகிறார். ராகுல் காந்தியை மன்னர் குடும்பத்தில் பிறந்தவர் என்று விமர்சனம் செய்கிறார். உண்மைதான்.. ராகுல் காந்தி மன்னர் குடும்பத்தில் பிறந்தாலும், ஏழைகளுக்கு வருடத்திற்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். ராகுல் காந்தி மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும், விவசாயிகளுக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனால் ஏழைத்தாயின் மகன் என்று சொன்ன மோடி, ஏழைகளை பரம ஏழைகளாக மாற்றிவிட்டார். பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக முன்னேறியுள்ளார். இதுதான் ஏழைத்தாயின் மகன் செய்யும் வேலையா?
|
தேர்தலுக்காக மோடி
கஜா புயலில் இறந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. ஆனால் இயற்கை சீற்றங்களால் எப்போதெல்லாம் கடலூர் பாதிக்கப்பட்டதோ அப்போதெல்லாம் உடனே ஓடி வந்து உதவி செய்தது திமுக மட்டுமே. புயல் பாதித்த போது வராத மோடி, தற்போது தேர்தலுக்காக தமிழகம் வருகிறார். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.