நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம் - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெய்வேலி : நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. என்எல்சி.யில் பாய்லர் வெடி விபத்து மற்றும் தொழிலாளர்கள் மரணங்கள் தொடர்பான விசாரணையின்போது இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் பல தொழிலாளர்கள் சிக்கி பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தில் சிலம்பரசன், பத்மநாபன், அருண்குமார், ராமநாதன், நாகராஜ், வெங்கடேசபெருமாள் ஆகிய ஒப்பந்த தொழிலாளர்கள் உடல்கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 17 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் 2-வது அனல் மின்நிலைய துணை முதன்மை பொறியாளர் சிவக்குமார், 53, சி.ரவிச்சந்திரன்,50, செல்வராஜ்,52 ஆகியோர் சிகிச்சை பலனளிக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிரந்தர தொழிலாளி வைத்தியநாதன்,45, தொப்ளிக்குப்பம் இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளி இளங்கோ,49, இளநிலை பொறியாளர் ஜோதிராமலிங்கம்,48 ஆகியோர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். இதன் மூலம், விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. என்எல்சி அனல்மின் நிலைய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
10 நாடுகள்.. மொத்தமாக கொரோனாவிலிருந்து விடுதலை.. முழு விவரம்!
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து என்எல்சி விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். மேலும், படுகாயம் அடைந்தோருக்கு இடைக்கால நிவாரணமாக 5 லட்சம் ருபாய் இழப்பீடு வழங்கப்படும். உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்கப்படும் என என்எல்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனிடையே அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்து மற்றும் தொழிலாளர் மரணங்கள் தொடர்பாக விசாரணை செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம் என்எல்சி நிறுவனத்திற்கு இடைக்கால அபராதத் தொகையாக ரூ. 5 கோடி அபராதம் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.