நீட் வியாபாரம் அல்ல என்று பேசியவர்கள் யாராவது இதற்கு பதில் சொல்வார்களா?.. இப்படியும் ஒரு பள்ளி!
விருத்தாசலம்: பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என்றும், தாங்கள் நடத்தும் நீட் தேர்வு பயிற்சி மையத்துக்கு வந்தால் போதும் என்றும், கற்பித்தலில் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளது விருத்தாசலத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி.
பன்னிரண்டாம் வகுப்பில் முழுவதுமாக மதிப்பெண் பெற்றாலுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் எளிதாக கிடைக்கும். ஆனால், பன்னிரண்டாம் வகுப்பில் குறைவாக மதிப்பெண் பெற்று நீட் தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துவிடும். ஆக மொத்தம் நீட் தேர்வை மட்டுமே மாணவர்கள் சவாலுடன் எதிர்கொள்ளத் தயாராகிறார்கள் என்பதை பயன்படுத்தி, கற்பித்தல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது விருத்தாசலம் ஜெயப்பிரியா மேல்நிலை பள்ளி.
இந்த பள்ளி நெய்வேலியில் நீட் பயிற்சிக்கான மையத்தையும் நடத்தி வருவதாகத் தெரிகிறது. இந்த பயிற்சி நிலையத்துக்கு மாணவர்களை சேர்க்க வருடத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வசூலிக்கிறதாம். இங்கு சென்னை உள்ளிட்ட பல ஊர்களின் பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் படிப்பதாகத் தெரிகிரது. குறிப்பாக ஜெயப்பிரியா பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் விருத்தாசலம் பள்ளிகளுக்கு வந்தால் போதும் மற்றபடி அவர்களின் வருகைப் பதிவேட்டில் வருகை நாட்கள் நிரம்பி இருக்கும்.
பெற்றோர்களே தங்களது பிள்ளைகளை நேரடியாக பள்ளிக்கு சென்று விடாமல், இங்கு வந்து விட்டுவிட்டு செல்கிறார்கள் என்றும், இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிக் கட்டணம் தவிர, மேற்கொண்டு இந்த பயிற்சிக்கான ஒரு லட்சம் ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுவதாகத் தெரிகிறது. இந்த பயிற்சி நிலையத்தில் இரண்டு ஷிஃப்ட் முறையும் கடைப்பிடிக்கப்பட்டு, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.
இதுக் குறித்து வடலூர் வட்டாரக் கல்வி அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. வட்டார கல்வி அதிகாரி கூறுகையில், தனியார் பள்ளி நிர்வாகியை உரிய ஆவணங்களை எடுத்து வர சொல்லி இருப்பதாகவும், கற்பித்தலில் முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், பயிற்சி நிலையம் மூடப்படும் என்றும், மாநில பள்ளிக் கல்வித் துறைக்கு தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நீட் வியாபாரம் அல்ல என்று பேசியவர்கள் யாராவது இதற்குப் பதில் சொல்வார்களா??