வீடுகளுக்குள் புகுந்து தகாத செயலில் ஈடுபட்ட வடஇந்திய இளைஞர்.. சிதம்பரத்தில் அடித்துக் கொலை..
Recommended Video
சிதம்பரம்: சிதம்பரத்தில் வடஇந்திய இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிதம்பரம் நகரில் உள்ள காசுக்கடைத் தெருவில் வட இந்திய வாலிபர் ஒருவர் மயங்கி கிடப்பதாக சிதம்பரம் நகர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று மயங்கிக் கிடந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வடமாநிலத்தை சேர்ந்த அந்த வாலிபர் யார் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சுமார் 10 பேரை நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வட இந்திய வாலிபர் அந்தப் பகுதியில் உள்ள வீடு மற்றும் கடைகளில் திருட முயன்ற தகவல்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதைப் பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கியுள்ளனர். இதில் அவர் மயங்கி கீழே விழுந்ததால் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. போலீஸார் விசாரணைக்காக அழைத்து வந்தவர்களைப் பார்ப்பதற்காக வியாபாரிகள் காவல் நிலையத்திற்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் நகர போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இவர் பார்ப்பதற்கு மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்தாராம். மூன்று வீடுகளுக்குள் நுழைந்து தகாத செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.