ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி ரூ.50 லட்சம் கடன்பட்ட அருள்வேல் - தாயுடன் தற்கொலை!
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பல லட்சம் ரூபாய் கடன் பட்டு நெருக்கடிக்கு ஆளாகி தனது தாயுடன் தற்கொலை செய்து கொண்டார் ஒரு இளைஞர். கடலூர் பன்ருட்டியில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடலூர்: ஆன்லைன் சூதாட்டம் நாடு முழுவதும் பலரின் உயிரை குடித்து வருகிறது. மதுரையில் சில நாட்களுக்கு முன்பு இளம் தம்பதியர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சென்னையில் ஐடி வேலை செய்யும் இளைஞர் ஒருவர் தனது தாயுடன் தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் ரம்மி விளையாடி 50 லட்சம் கடன் பட்டதால் ஏற்பட்ட நெருக்கடியே இருவரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.
பண்ருட்டி வேலம்பாளையத்தைச் சேர்ந்த சிற்றரசு ராஜலட்சுமி தம்பதியரின் மகன் அருள் வேல், நன்றாக படித்து சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். லட்சக்கணக்கில் சம்பாதித்த பணம், வீடு கார் என்று செட்டிலானார். கடந்த 2013ஆம் ஆண்டு திவ்யா என்று பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. வாழ்க்கை உற்சாகமாக போய் கொண்டிருந்தது அதன் சாட்டியாக 3 வயதில் அழகான மகள்
நன்றாக சம்பாதித்த அருள்வேல் ஆன்லைன் சீட்டாட்டத்திற்கு அடிமையானார். அங்கே இங்கே கடன் வாங்கி சூதாடினார். ரூ. 50 லட்சத்திற்கு மேல் கடன் படவே, பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தனர். நச்சரிப்பு தாங்காமல் கடும் மன அழுத்தத்திற்கு ஆளானார். வீட்டில் மனைவியும் சண்டை போடவே, அதே மன அழுத்தத்தோடு வேலம்பாளையத்தில் இருந்த அம்மா வீட்டிற்கு வந்தார்.
தனது நிலையை சொல்லி கதறி அழுத அருள்வேல் அடுத்து கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தார் அம்மா. பெற்ற மகனே இந்த முடிவு எடுத்த பின்னர் ஏன் உயிரோடு இருக்க வேண்டும் என்று நினைத்து இருவருமே தற்கொலை செய்து கொண்டனர்.
திவ்யாவின் உறவினர்கள் நேற்று அருள்வேல் வீட்டிற்கு சென்ற போது தனது தாயுடன் மயங்கிய நிலையில் இருந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர். பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானதால் தனது உயிரை இழந்ததோடு தனது அம்மாவின் மரணத்திற்கும் காரணமாகிவிட்டார் அருள்வேலை.