மீனவர் வலையில் சிக்கிய பிரம்மோஸ் ஏவுகணை பாகம்.. கடலூரில் பரபரப்பு!
கடலூர்: பிரம்மோஸ் ஏவுகணையின் உதிரிபாகம் கடலூரில் மீனவர் வலையில் சிக்கியது. கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் விசாரணை.
கடலூர் தாழங்குடா மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் அறிவரசன் வழக்கம்போல் இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது தான் வீசிய வலையில், உருளை வடிவிலான மிகப்பெரிய மர்ம பொருள் ஒன்று சிக்கியுள்ளது.
அதனை மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டுவந்த அறிவரசன், தேவனாம்பட்டினம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் அந்த மர்ம பொருளை ஆய்வு செய்தனர்.
ஆய்வில் அந்த மர்ம பொருள், பிரம்மோஸ் BIFP-04 என்ற ஏவுகணையின் உதிரிபாகம் என்பது தெரியவந்தது. இந்தியா - ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணை அதிக அளவு வெடிபொருட்களை தாங்கி செல்வதுடன், நீண்ட தொலைவில் இருக்கும் இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
தற்போது மீனவர் வலையில் சிக்கியுள்ள உதிரிபாகம் கடந்த 2017 - 18 ஆண்டுகளில் ஏவப்பட்ட ஏவுகணையில் இருந்த உதிரிபாகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. உருளை வடிவிலான இந்த உதிரிபாகம் சுமார் 60 கிலோ எடை உள்ளது. மீனவரின் வலையில் ஏவுகணையின் பாகம் சிக்கியது குறித்த தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அதனை, ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இதனிடையே கடலோர காவல்படையினர் மற்றும் கடலூர் தேவனாம்பட்டினம் காவல் நிலைய போலீசார் இந்த உதிரிபாகம் எந்த ஆண்டை சேர்ந்தது என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயரதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
இதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி கடலில் மீனவர் ஒருவரின் வலையில் இஸ்ரோ அனுப்பிய ராக்கெட்டின் உதிரிபாகம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
ஜக்கம்மா சொல்லுறா.. ஜக்கம்மா சொல்லுறா.. ஓட்டு போடுங்க.. திமுக நூதன பிரச்சாரம்!