பொங்கல் பரிசுக்கு மட்டும் 2 ஆயிரம் கோடி எங்கிருந்து வந்தது?... கமல்ஹாசன் கேள்வி
Recommended Video
கடலூர்: பொங்கல் பரிசுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது? என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேசிய கொடியை ஏற்றினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிராமங்கள் செழிக்க உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கிராம சபை கூட்டம்
கடலூர் மாவட்டம் முழுவதும் இரண்டு நாள் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் கமல்ஹாசன் 70 குடியரசு தினமான இன்று கடலூர் அருகே உள்ள குணமங்கலம் மற்றும் அழகியநத்தம் கிராம பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
சுவரொட்டியில் கணக்கு
அப்போது, ஒவ்வொரு மக்களும் தங்களின் உரிமை என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்த வேண்டும். கிராம சபைகளில் கூறப்படும் வரவு, செலவு கணக்குகளை சுவரொட்டியாக ஒட்டப்பட வேண்டும் என்றார்.
மருத்துவ வசதி
மேலும், அழகியநத்தம் கிராமப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் மருத்துவ வசதி செய்து தர கூறினார்கள். ஆனால், அதை நான் கிராமசபை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்ற அறிவுறுத்தினேன். அவர்களும் தீர்மானமாக நிறைவேற்றினார்கள். இது போன்று ஒவ்வொரு கிராமத்திலும் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
போதிய வசதிகள் இல்லை
ஒவ்வொரு கிராம நிர்வாகமும் நேர்மையான முறையில் நடைபெற அரசு வசதிகள் செய்து தரவேண்டும். தற்போது, ஓரளவு வசதிகள் அரசு செய்து கொடுத்துள்ளது. அதை கையில் எடுத்து பிரயோகிக்கும் கடமையும், உரிமையும் பொது மக்களிடம் உள்ளது. அதை எடுத்துரைக்க தான் நாங்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று கிராமசபைகள் கலந்து கொள்வதாக தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழுமையாக நிறைவேற்ற முடியாது எனத் தெரிவித்தார். மேலும், கிராமசபை கூட்டம் முறையாக நடைபெறுகிறதா என்பதை உறுதிப்படுத்தவே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம் என தெரிவித்தார்.
அரசுக்கு அக்கறை இல்லை
கடந்த 25 ஆண்டுகளாக கிராமசபை கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்பது தான் உண்மை என தெரிவித்தார். கடந்த சில காலமாக விவசாயிகள் புறந்தள்ளப்பட்டு வருவதாகவும் அதுவும் மாற்றப்பட வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் அழுத்தமான எண்ணமாக உள்ளது. அதை நோக்கியே நாங்கள் பயணிப்போம் என தெரிவித்தார். இந்த அரசு எதிலும் அக்கறை இல்லாமல் உள்ளதாக தெரிவித்தார்.