எப்படி இருந்த நீங்க இப்படி மாறிட்டீங்க... எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு பாமக கேள்வி
Recommended Video
கடலூர்: எல்லா வன்னியர்களும் உங்களை போல் திமுகவுக்கு அடிமையாக இருப்பார்கள் என நினைக்கவேண்டாம் என முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு பாமக பதிலடி கொடுத்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸை விமர்சித்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று முன் தினம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில் பாமக மாநில துணை பொதுச்செயலாளர் வைத்தி புதிதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சந்தையின் முகப்பில் சண்டையிடுவோரை போல் சகதி வார்த்தைகளை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அள்ளி தெளிப்பதாகவும், இது தான் திமுகவின் இன்னாள் தலைவர் கற்றுத்தந்த நாகரீகமோ என வினவியுள்ளார்.
வடமாவட்டங்களில் வன்னியத் தலைவர்களையும், நிர்வாகிகளையும் ஸ்டாலின் அவமதிப்பதாக கூறி மதுரைக்கு சென்று மு.க.அழகிரியிடம் சரணடைந்தீர்களா? இல்லையா? என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு பாமக துணைப்பொதுசெயலாளர் வைத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஜெ.குரு திமுக ஆட்சியில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டபோது, அதனைக் கண்டித்து அமைச்சர் பதவியிலிருந்து விலகாதது ஏன் வினவியுள்ளார்.
ஜெ.குருவை கொல்ல திமுக தலைமை சதித்திட்டம் தீட்டியதாகவும், அதுபற்றிய உண்மைகள் தெரிந்தும் அமைச்சர் பதவியை காப்பற்றிக் கொள்வதற்காக வாய்மூடி அமைதியாக இருந்தவர் தான் இந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என சாடியுள்ளார். மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவை பற்றி பேச திமுகவுக்கோ, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு எந்த தகுதியுமில்லை என தெரிவித்துள்ளார்.
1989-ல் வன்னியர்கள் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கக் கூடாது என ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்தீர்கள், அப்போது இருந்த வீரமும், சுயமரியாதையும் இப்போது எங்கே போனது என அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பியுள்ளார். இனி வரும் நாட்களிலாவது பழைய பன்னீர்செல்வமாக மாற வேண்டும் என பாமக துணைப் பொதுச்செயலாளர் வைத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.