4 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம், சீரியஸ் சீரியல் வில்லி கைது -காதில் உதைத்து கொன்றதாக பகீர் புகார்
கடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பெற்றோருடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர்களது 4 வயது மகனை காதிலேயே எட்டி உதைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் தொடர்பாக இளம் பெண்ணை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூர் கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்நாதன் ஓட்டுனரான செந்தில்நாதனுக்கும், அவரின் மனைவி லட்சுமிக்கும் 4 வயதில் அஸ்வின் என்ற மகன் உள்ளார்.
நேற்று முன்தினம் மதியம் 3 மணி அளவில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது அஸ்வினைக் காணவில்லை. புகாரின் பேரில் முத்தாண்டிகுப்பம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறுவனைத் தேடி வந்தனர்.
மாயமான சிறுவன்
இந்நிலையில் சிறுவன் கிடைக்காத அதிர்ச்சியில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கீழக்கொல்லை பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் நள்ளிரவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது. இந்நிலையில் நேற்று காலை கீழக்கொல்லை கிராமத்தில் சீனிவாசன் என்பவரது முந்திரி தோப்பில் பலத்த காயங்களுடன் சிறுவன் இறந்து கிடந்தான். சிறுவன் இறப்பதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என 20க்கும் மேற்பட்டோர் மீண்டும் கீழக்கொல்லை பகுதியில் சாலை மறியல் செய்தனர்.
கொடூர கொலை
கொலை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை கூறியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். முதற்கட்ட விசாரணையில் செந்தில்நாதன் வீட்டின் அருகில் வசிக்கும் இளம் பெண் ரஞ்சிதா சிறுவனை அழைத்துச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து சிறுவனை அழைத்துச் சென்ற ரஞ்சிதா அவரது தந்தை முருகவேல் தாய் சந்திரா, சித்தி காடாம்புலியூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு வளர்மதி ஆகியோரை காவல்துறையினர் விசாரித்தனர். விசாரணையில் சிறுவனை கொலை செய்ததை ரஞ்சிதா ஒப்புக்கொண்டார்.
குடும்பத்தினருடன் முன்விரோதம்
தொடர்ந்து ரஞ்சிதாவை கைது செய்த காவல்துறையினர் சிறுவன் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தபோது , சிறுவன் அஸ்வின் அப்பா அம்மா என்று மட்டுமே பேசுவான் மற்றபடி ஏதும் பேச மாட்டான் எனவும், காதுமந்தம் காரணமாக அஸ்வின் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவரது தந்தை செந்தில்நாதன் மற்றும் ரஞ்சிதாவின் குடும்பம் பங்காளிகள் எனவும், இதனால் அவர்களிடையே சில ஆண்டுகளாக முன்விரோதம் உள்ளது. அஸ்வின் அடிக்கடி ரஞ்சிதாவின் வீட்டிற்கு வருவான் என்பதனால் அஸ்வினின் தாய் லட்சுமி அடிக்கடி ரஞ்சிதாவை ஆபாசமாக திட்டுவார் என கூறப்படுகிறது
இளம்பெண் கைது
இதனால்தான் அஸ்வினை ரஞ்சிதாவை அடிப்பது வழக்கம். அவனும் அதிகம் பேச மாட்டான் என்பதனால் தொடர்ந்து அஸ்வினை ரஞ்சிதா துன்புறுத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை ரச்ஞிதா முந்திரி தோப்பிற்கு சென்றபோது அஸ்வினும் உடன் வந்துள்ளான். இதனால் அவனை எட்டி உதைத்து கீழே தள்ளி நீ ஏன்டா என்னுடன் வருகிறாயா என அடித்து தாக்கியுள்ளார். இதில் கீழே விழுந்த அஸ்விலுக்கு காதில் ரத்தம் வழிந்து தலையில் காயம் ஏற்பட்டதால் அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டதாக ரஞ்சிதா கூறினார். இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.