கடலூரில் கொரோனாவை வென்ற 13 போலீசார்.. எப்படி வீட்டுக்கு அனுப்பி வச்சிருக்காங்கன்னு பாருங்க!
கடலூர்: கடலூர் மாவட்டம் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சியின் போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, 9 பயிற்சி பெண்கள் உட்பட 13 காவலர்கள் பூரண குணமடைந்தனர். அவர்களை சக காவலர்கள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர் மாவட்டத்தில் ஆரம்பித்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்தவர்களால் பாதிப்பு எண்ணிக்கை கிடு கிடுவென உயர்ந்து, மூன்று இலக்கணத்தை தொட்டது. கடலூர் மாவட்டத்தில் இதுவரை 421 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், 406 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில் 133 பெண் பயிற்சிக் காவலர்கள் கடந்த 4 ம் தேதி முதல் பயிற்சி பெற்று வந்தனர். அவர்கள் சென்னையில் இருந்து வந்தவர்கள் என்பதால் அவர்களுக்குக் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த 11 ம் தேதி அன்று கிடைத்த பரிசோதனை முடிவில் பயிற்சி பெண் காவலர்கள் 10 பேர் உட்பட மொத்தம் 14 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து கடலூர் காவலர் பயிற்சிப் பள்ளி மூடப்பட்டது. அதேபோல் அங்கு பயிற்சியில் இருந்த மற்ற 124 பெண்காவலர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதனிடையே தற்போது 9 பெண் பயிற்சி காவலர்கள் மற்றும் பயிற்சி கொடுத்த காவலர்கள் 4 பேர் என 13 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
சமாளிக்க முடிந்தால் மட்டும் போதாது.. மத்தவங்களுக்கும் உதவி செய்யுங்க.. வாசகரின் அதிரடி!
இவர்கள் அனைவரும் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தபோது சக பயிற்சி காவலர்கள் வரிசையில் நின்று பேண்ட் வாத்தியங்கள் முழங்க அவர்களை வரவேற்று அவர்கள் மீது மலர் தூவினர். மேலும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பூங்கொத்து கொடுத்து அனைவரையும் வரவேற்றார். அதன் பின்னர், அனைவருக்கும் பழக்கூடைகள் கையுறைகள், முகக்கவசம், கிருமிநாசினி ஆகியவற்றையும் வழங்கினார். இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.