என் புருஷன் ரொம்ப நல்லவர்.. அவரை அழ வச்சுட்டேன்.. 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை
கடலூரில் பெண் தற்கொலை.. உருக்கமான கடிதம் சிக்கியது
Recommended Video
கடலூர்: "என் புருஷன் ரொம்ப நல்லவர்.. ரொம்ப பிடிக்கும்.. அவரை அழவெச்சுட்டேன்..." என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, பெண் ஒருவர் 2 மகன்களை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் பாதிரிக்குப்பம் பகுதியை சேர்ந்த தம்பதி மதிவாணன் - சிவசங்கரி. மதிவாணன் அப்பகுதியில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இவர்களுக்கு 12 மற்றும் 9 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.
சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு போய்விட்டு மதிவாணன் வீடு திரும்பினார். ஆனால் கதவை எவ்வளவு தட்டியும் திறக்காததால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றார்.
கதறி அழுதார்
அப்போதுதான் 2 மகன்களும் இறந்தநிலையிலும், சிவசங்கரி தூக்கில் தொங்கியபடியும் கிடந்தார். இதையடுத்து 3 பேரையும் கட்டித்தழுவி மதிவாணன் கதறி அழுதார். தகவல் அறிந்த போலீசார் இது சம்பந்தமான விசாரணையில் இறங்கினர். அப்போது சிவசங்கரி தற்கொலை செய்வதற்கு முன்பு கணவர், தங்கை, தாய், போலீஸ் என 4 பேருக்கும் தனித்தனியாக 4 கடிதங்களை எழுதி வைத்திருந்ததை போலீசார் கைப்பற்றினர்.
உருக்கமான கடிதம்
நானும், எனது கணவரும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டோம். மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தோம். நான் கணவருக்கு கஷ்டத்தை ஏற்படுத்தி விட்டேன். கணவர் ரொம்ப பொறுமையானவர். நல்லவர். நிறைய அழவைத்து விட்டேன். நான் எனது 2 மகன்களையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டேன்.
பிரேத பரிசோதனை
இதற்கு என்னை தவிர வேறு யாரும் காரணம் இல்லை. எங்களது உடல்களை போலீசார் பிரேத பரிசோதனை செய்யாமல், அப்படியே எனது கணவரிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று எழுதப்பட்டுள்ளது. மற்ற கடிதங்களிலும் இப்படித்தான் சிவசங்கரி எழுதி உள்ளார். குழந்தைகளின் உடல்களின் மேல் பூக்கள் தூவப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
எதற்காக தற்கொலை?
எதற்காக தற்கொலை, கொலை என்று சிவசங்கரி அந்த கடிதத்தில் தெரிவிக்கவில்லை. மகன்களுக்கு விஷம் கொடுத்திருக்கலாம் அல்லது மகன்களின் கழுத்தில் கீறல்கள் உள்ளதால் கழுத்தை நெரித்தும் கொன்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இது சம்பந்தமான விசாரணை இன்னும் தொடர்கிறது என்றாலும், சிவசங்கரியின் உருக்கமான கடிதத்தினால் அந்த பகுதி மக்கள் கலங்கி உள்ளனர்.