"சரக்கு" லாரிக்கு சூடம் ஏற்றி கும்பிட்ட குமரி குடிமகன்.. ஆளுக்கு ஒன்னுதான்.. கடலூர் எஸ்பி செக்
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதை தடுக்க ஒருவருக்கு ஒரு மதுபாட்டில் மட்டுமே வழங்க வேண்டுமென மாவட்ட எஸ்.பி ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொது இடத்தில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு மே 17 ஆம் தேதி வரை 3 ஆம் கட்டமாக ஊரடங்கை நீட்டித்துள்ளது. எனினும் அதில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்ததால் டெல்லி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டது.
தமிழகத்திலும் அண்டை மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி நாளை முதல் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மதுபான கடைகள்
டாஸ்மாக் மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கவும், தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் விற்பனை செய்யவும் உத்தரவிட்டுள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் மதுபான கடைகள் திறக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஒவ்வொரு டாஸ்மாக் கடைகள் முன்பும் 2 போலீசாருடன், ஊர்காவல்படை வீரர்கள் அல்லது தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். ஒவ்வொருவருக்கும் டோக்கன் விநியோகம் செய்து மதுபாட்டில் வழங்க வேண்டும்.
பறக்கும் படை வேறு வருதாம்
2 மணி நேரத்திற்கு ஒரு முறை பறக்கும் படையினர் ஆய்வு செய்ய வேண்டும். வயது அடிப்படையில் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நேரங்கள் ஒதுக்கீடு செய்து மதுபானம் வழங்க வேண்டும். கடைக்கு அரை கி.மீ.க்கு முன்பாகவே மதுப்பிரியர்களின் வாகனங்களை நிறுத்தி விட்டு வரிசைப்படுத்த வேண்டும். அதிக கூட்டம் கூடும் மதுக்கடைகளில் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது.
ஆளுக்கு ஒரு பாட்டில்தான்
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதை தடுக்க ஒருவருக்கு ஒரு மதுபாட்டில் மட்டுமே வழங்க வேண்டுமென மாவட்ட எஸ்.பி ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொது இடத்தில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இதனிடையே ஊரடங்கு காலத்தில், மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்தும், சுவரில் துளையிட்டும், மதுபாட்டில்களை திருடிச் சென்றனர்.
செம பாதுகாப்பு
இதனால் கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் குடோன்கள் மற்றும் திருமண மண்டபங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. நாளை கடைகள் திறக்கப்பட உள்ளதையொட்டி குடோன்கள் மற்றும் திருமண மண்டபங்களில் வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் அந்தந்த டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சூடமெல்லாம் ஏத்துறாங்களே
இதற்கிடையே, நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குடோனிலிருந்து டாஸ்மாக் கடைக்கு மதுபானம் கொண்டு வந்த வாகனத்திற்கு கையில் சூடம் ஏற்றி வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் மதுபிரியர்கள். அந்த அளவுக்கு காய்ந்து போய்க் கிடக்கிறார்கள் இந்த குடிப் பிரியர்கள் என்பது சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.