ஊருக்குள் வராதீங்க.. எச் ராஜாவுக்கு எதிராக திமுக- அதிமுக இணைந்து அதிரடி போஸ்டர்!
திட்டக்குடி: ஊருக்குள் வந்தால் வன்முறை ஏற்படும் எனக் கூறி பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தில் பழமைவாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு கட்டடங்கள் சேதமடைந்ததால் ஒரு தரப்பினர் கோயில் திருப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் கிராமத்தில் மோதல் போக்கு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.
செப்.15 திருப்பூர் மாநாடு தேமுதிகவுக்கு திருப்புமுனையை தரும்.. பிரேமலதா நம்பிக்கை
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி அன்று சிலையை பிரதிஷ்டை செய்ய பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா வருவதாக ஊர் முழுக்க சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
இதனை கண்டித்து இந்த கிராம மக்கள் மத ரீதியாக பிளவுப்படுத்தும் எச் ராஜா எங்கள் ஊருக்கு வரக் கூடாது என்று அனைத்து கிராம மக்களும் , திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து ஊர் முழுக்க சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர்.
மேலும் இந்த எதிர்ப்பையும் மீறி எச் ராஜா இந்த ஊருக்கு வந்தால் அவரை எதிர்த்து கடுமையான போராட்டம் நடத்துவோம் என ஊர்மக்கள் எச்சரித்துள்ளனர். இதனால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.